புதுடெல்லி: தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணி நாடாக வளர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய தொழில்நுட்ப தின வாழ்த்துகள்! நமது விஞ்ஞானிகளுக்கு பெருமை சேர்க்கவும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும், 1998-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பொக்ரான் சோதனைகளை நினைவுகூரவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவை நமது நாட்டின் வளர்ச்சிப் பாதையில், குறிப்பாக தன்னம்பிக்கைக்கான நமது தேடலில் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தன.
நமது மக்களால் முன்னேறிச் செல்லும் இந்தியாவானது விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் கண்டுபிடிப்பு, பசுமை தொழில்நுட்பம் உட்பட பல தொழில்நுட்பங்களில், பல்வேறு அம்சங்களில் உலகளாவிய முன்னணி நாடாக வளர்ந்து வருகிறது.
அறிவியல் ஆராய்ச்சி மூலம் எதிர்கால சந்ததியினருக்கு அதிகாரம் அளிப்பதற்கான எங்கள் செயல்பாடுகளை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். தொழில்நுட்பம் மனிதகுலத்தை மேம்படுத்தட்டும். நமது தேசத்தைப் பாதுகாக்கட்டும். எதிர்கால வளர்ச்சியைத் தூண்டட்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.