லாகூர்,
பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு இந்தியாவில் பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளனர்.
குறிப்பாக 2005ம் ஆண்டு பெங்களூரு தாக்குதல், 2006ம் ஆண்டு நாக்பூர் தாக்குதல், 2008ம் ஆண்டு ராம்பூர் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி அபு சைபுல்லா கலீத் நேபாளத்தில் போலி பெயரில் வசித்து வந்தான். இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். பாகிஸ்தானை சேர்ந்த கலீத் நேபாளத்தில் வினோத் குமார் என்ற போலி பெயரில் வசித்து வந்தான். அவன் நேபாளத்தை சேர்ந்த நக்மான் பனு என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தான்.
இந்தியாவில் தாக்குதல்களை நடத்திவிட்டு நேபாளத்தில் இருந்து பின்னர் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டான். பயங்கரவாதி கலீத் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்தான்.
இந்நிலையில், பயங்கரவாதி கலீத் நேற்று மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். சிந்து மகாணம் பிடின் மாவட்டம் மத்லி பகுதியில் பயங்கரவாதி கலீத் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். மத்லி பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்ற கலீதை பைக்கில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.