கல்லூரி மாணவர்களுக்காக 20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்: தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியது

கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகளை வழங்குவதற்கான கொள்முதலுக்கு தமிழக அரசின் எல்காட் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். அதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. அப்போது, தமிழகத்தில் பல்வேறு கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் உயர் தொழில்நுட்ப சாதனங்களை வழங்க திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லெட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்காக முதல்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

இந்நிலையில் அத்திட்டத்தை செயல்படுத்தும் விதமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. அதன்படி 8 ஜிபி ரேம் (டிடிஆர்-4), 256 ஜிபி ஹார்டு டிஸ்க் (எஸ்எஸ்டி), 14 அல்லது 15.6 இன்ச் திரை, ஐ3 இன்டெல் அல்லது ஏஎம்டி பிராசசர், புளூடூத் 5.0, விண்டோஸ் 11 ஓஎஸ், 720பி ஹெச்டி கேமரா, ஒரு வருட உத்தரவாதம் உள்ளிட்ட அம்சங்களுடன் ‘தமிழக அரசு மடிக்கணினி’ என்ற வாசகமும் இதில் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் வரும் ஜூன் 25-ம் தேதிக்குள் மடிக்கணினியை கொள்முதல் செய்வதற்கு தமிழக அரசு டெண்டர் கோரியிருக்கிறது. இதையொட்டி கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை முகாம் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், எல்காட் நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.