‘சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்துவிட்டு இப்படி செய்யலாமா?’ – பிரதமர் மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

புதுடெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தியபோது அதனை கடுமையாக எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அதற்கான அனைத்துப் பெருமைகளையும் தனதாக்கிக்கொள்வதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 20 முதல்வர்கள், 18 துணை முதல்வர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆபரேஷன் சிந்தூர், அதன்பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரை வெற்றி பெறச் செய்த முப்படைகளுக்கும் கூட்டத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமைக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்மானத்தை மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டத்தில் முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

நாடு முழுவதும் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுதொடர்பான தீர்மானம் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜே.பி. நட்டா, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முப்படைகளும் இணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தின. இதற்காக பிரதமர் மோடிக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முப்படைகளின் வீர, தீரத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாங்கள் சாதி அரசியலை ஊக்குவிக்கவில்லை. எனினும் நலிவுற்ற மக்களை மேம்படுத்துவதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என தெரிவித்தார்.

இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் வலியுறுத்தியபோது அதனை கடுமையாக எதிர்த்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அதற்கான அனைத்துப் பெருமைகளையும் தனதாக்கிக் கொள்வதாக ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக பிரதமர் மோடி பேசிய இரண்டு வீடியோக்களை இணைத்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில், ஏப்ரல் 30, 2025 அன்று, மோடி அரசாங்கம் திடீரென எதிர்பாராத விதமாக சாதி கணக்கெடுப்பை அறிவித்தது.

நேற்று, தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களின் கூட்டத்தில், எதிர்பார்த்தபடி, பிரதமர் அதற்கான அனைத்துப் பெருமைகளையும் தானே ஏற்றுக்கொண்டார்.

ஆனால் பிரதமர் முன்பு என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்(இணைக்கப்பட்டுள்ள 2 வீடியோக்கள் குறித்த குறிப்பு) –

1. பிஹாரின் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு அறிக்கை 2 அக்டோபர் 2023 அன்று பகிரங்கப்படுத்தப்பட்டபோது.

2. ஏப்ரல் 28, 2024 அன்று, சாதி கணக்கெடுப்பு கோரிக்கை குறித்து காங்கிரஸ் கட்சி அவரிடம் ஒரு கேள்வி கேட்டபோது.” என தெரிவித்துள்ளார்.

முதல் கிளிப்பில், “அவர்கள் (எதிர்க்கட்சிகள்) சாதி அடிப்படையில் சமூகத்தைப் பிரித்து, இப்போதும் அந்தப் பாவத்தைச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.” என்று மோடி கூறுகிறார்.

இரண்டாவது கிளிப்பில், காங்கிரஸ் சாதி கணக்கெடுப்பு கோரிக்கை குறித்து கேட்டபோது, ​​பிரதமர் மோடி, அது “நகர்ப்புற நக்சல் மனநிலையின் ஒரு பகுதி” என்று கூறுகிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.