RCB இன்னைக்கு தோக்கனும்.. GTன் வேண்டுதல் இதுதான்?

IPL Playoff Race: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டம் இன்று (மே 27) லக்னோ ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில், ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இரவு 7 மணி டாஸ் வீசப்பட்டு 7.30 மணிக்கு தொங்டகும் இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. 

லக்னோ அணியை பொறுத்தவரையில் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே தொடரை விட்டு வெளியேறிவிட்டதால், தோற்றாலும் ஒன்று தான் வெற்றி பெற்றாலும் ஒன்று தான். ஆனால் மறுபுறம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அப்படி கிடையாது. அவர்களுக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது. ஏனெனில், இப்போட்டியில் வென்றால், தற்போது இருக்கும் முன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி, குவாலிஃபையர் 1க்கு தகுதி பெறுவார்கள். 

ஒருவேளை தோற்றால், எலிமினேட்டர் தான். அங்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோத வேண்டி இருக்கும். இப்போட்டியில் தோற்றால், ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல, எலிமினேட்டர் 1, குவாலிஃபையர் 2 மற்றும் இறுது போட்டி என மூன்று போட்டிகளை வெல்ல வேண்டும். அதுவே இன்று (மே 27) நடக்கும் போட்டியை வென்றால், குவாலிஃபையர் 1 மற்றும் இறுதி போட்டியை வென்றால் போதும். எனவே இன்றைய போட்டியில் வெல்ல ஆர்சிபி முனைப்புடன் விளையாடும். 

குஜராத் டைட்டன்ஸ் அணியின் நிலை என்ன?

குஜராத் அணி 14 லீக் ஆட்டங்களையும் விளையாடிவிட்டது. அதில் அந்த அணி 8 வெற்றிகளை பெற்று புள்ளிப்பட்டியலின் 2வது இடத்தில் உள்ளது. ஆர்சிபி அணியும் தற்போது 8 போட்டிகளை வென்றுள்ளது. குஜராத் அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் ஒரு இடம் முன்னாடி உள்ளது. அதே சமயம் ஆர்சிபி அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளதால், அவர்கள் அதில் வெற்றி பெற்றால், இரண்டாவது இடத்திற்கு முன்னேறி குஜராத் அணியை கீழே தள்ளிவிடுவார்கள். 

குஜராத் அணியின் வேண்டுதல்

இன்று (மே 27) நடைபெற இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியில், பெங்களூரு அணி தோற்க வேண்டும் என்று தான் குஜராத் டைட்டன்ஸ் அணியின் எண்ணமாக இருக்கும். ஏனென்றால், ஆர்சிபி வென்றால், அவர்கள் எலிமினேட்டருக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். அதுவே ஆர்சிபி தோற்றால், குவாலிஃபையர் 1க்கு செல்வார்கள். இதையே குஜராத் அணி விரும்பும். 

குவாலிஃபையர் 1 & 2, எலிமினேட்டர் என்றால் என்ன?

குவாலிஃபையர் 1க்கு புள்ளிப்பட்டியலில் இருக்கும் முதல் இரண்டு அணிகள் தகுதி பெறும். அதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். அதுவே தோல்வி பெற்றால், அவருக்கு இறுதி போட்டிக்கு செல்ல மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும். அதாவது எலிமினேட்டரில் வெற்றி பெற்றவர்களுடன் மோதி இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு. 

முதலில் குவாலிஃபையர் 1 நடைபெறும். இந்த ஆண்டு அப்போட்டி நாளை மறுநாள் (மே 29) நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டிக்கும் தோல்வி பெறும் அணி குவாலிஃபையர் 2க்கும் செல்லும். குவாலிஃபையர் 1க்கு பின்னர் எலிமினேட்டர் நடைபெறும். இதில் தோற்கும் அணி தொடரை விட்டு வெளியேறும். அதுவே வெற்றி பெறும் அணி குவாலிஃபையர் 2க்கு முன்னேறும். 

குவாலிஃபையர் 2வில், எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியும் குவாலிஃபையர் 1ல் தோல்வி அடைந்த அணியும் மோதிக்கொள்ளும். இதில் வெற்றி பெறும் அணியே இறுதி போட்டிக்கு செல்லும். தற்போது, குவாலிஃபையர் 1க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. எலிமினேட்டருக்கு மும்பை அணி தகுதி பெற்றுள்ளது. குஜராத் அணியின் நிலை இன்று நடக்கும் போட்டியை பொறுத்துதான் இருக்கிறது. ஆர்சிபி வெற்றி பெற்றால், அந்த அணி பஞ்சாப் உடன் மோதும், குஜராத் அணி மும்பை உடன் மோதும். அதுவே ஆர்சிபி தோல்வி அடைந்தால், ஆர்சிபி மும்பை உடனும், குஜராத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியுடனும் மோதும்.  

மேலும் படிங்க: இந்த ஆண்டுடன் ஓய்வை அறிவிக்கும் 5 சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்!

மேலும் படிங்க: கவுதம் கம்பீரால் ஓய்வை அறிவித்த மற்றொரு வீரர்! இங். தொடருக்கு முன்பு திடீர் ஓய்வு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.