புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் குறித்து கட்டுரைப் போட்டி ஒன்றினை, ஜூன் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரையில் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது. போட்டியில் வெற்றிபெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வாய்ப்பும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாதுகாப்புத்துறை அமைச்சகம் இளம் உள்ளங்களை தங்களின் குரல்களை எழுப்ப அழைக்கிறது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் இந்திய அரசின் ஆபரேஷன் சிந்தூர் – பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் கொள்கையை மறுவரையறை செய்தல் என்ற தலைப்பில் இருமொழிக் கட்டுரைப் போட்டியில் பங்கேற்கவும்.
போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசும், டெல்லி செங்கோட்டையில் நடைபெற இருக்கும் 78-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் சிறப்பு வாய்ப்பினையும் பெறலாம். போட்டி நாள்: ஜூன் 1 – 30-ம் தேதி வரை. ஒரு நபர் ஒரு கட்டுரை மட்டுமே அனுப்ப வேண்டும். கட்டுரைகள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு: mygov.in. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப். 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7-ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர்-ன் கீழ், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாக நிலைகள் மீது துல்லிய தாக்குல் நடத்தியது.
பாகிஸ்தான் தாக்குதலுக்கு பின்பு நடத்தப்பட்ட அனைத்து பதிலடி நடவடிக்கைகளும் ஆபரேஷன் சிந்தூரின் கீழ் மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா ஒரு புதிய சிவப்புக் கோட்டை வரைந்துள்ளதாகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பயங்கவாதத்துக்கும் இந்தியாவின் பதிலில், ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய இயல்பை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி, தலைமையிலான அரசு கூறி வருகிறது.