புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு சீனாவில் பரவ ஆரம்பித்த கொரோனா நோய், நாளடைவில் உலகம் முழுவதும் பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. இதனிடையே தடுப்பூசி செலுத்திய பிறகு, கொரோனா நோய்த் தொற்றின் பரவல் சற்று குறைந்தது. 2022-ம் ஆண்டு வரை உச்சத்தில் இருந்து, பின்னர் 2023 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையும், இறப்பு விகிதமும் குறைந்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 114 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் 112 பேர், மேற்கு வங்காளத்தில் 106 பேர் மற்றும் டெல்லியில் 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் மராட்டிய மாநிலத்தில் 3 பேரும், டெல்லி மற்றும் கர்நாடகத்தில் தலா 2 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.