ராய்பூர்: சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் ரூ.40 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் தலைவர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் மூத்த நக்சல் போராளிகள் பதுங்கியிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை (டிஆர்ஜி) மற்றும் சிறப்புப் பணிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டுக் குழு இன்று வனப்பகுதியில் ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. பின்னர் கூட்டுப் படைகளுக்கும், நக்சல்களுக்கும் இடையே அதிகாலை முதல் கடுமையான துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இந்த மோதலின் போது, மிகவும் தேடப்படும் நக்சல் தலைவர்களில் ஒருவரான மத்திய குழு உறுப்பினர் சுதாகர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது தலைக்கு ரூ.40 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, சத்தீஸ்கரில் மே மாதம் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவராஜு என்று அழைக்கப்படும் நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டார். அவரின் தலைக்கு ரூ.1.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. நக்சல் கோட்டையான அடர்ந்த அபுஜ்மத் காடுகளில் மாவட்ட ரிசர்வ் காவல்படை தலைமையிலான கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்ட 30 நக்சல்களில் பசவராஜும் ஒருவர் ஆவார். இதனையடுத்து கடந்த மாதத்தில் பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
நம்பலா கேசவ் ராவ் கொல்லப்பட்டது குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “இந்த நடவடிக்கை நக்சல்வாதத்தை ஒழிப்பதற்கான போரில் ஒரு முக்கிய சாதனை. நம்பலா கேசவ் ராவ் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பு. நக்சல்வாதத்திற்கு எதிரான இந்தியாவின் 30 ஆண்டு காலப் போரில் ஒரு பொதுச் செயலாளர் பதவியில் இருந்த தலைவர் நமது படைகளால் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை” என்றும் கூறினார்.