“மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார், ஆனால் நான்…'' – மோடி மேடையில் உமர் அப்துல்லா ஆதங்கம்

ஸ்ரீநகர்: “மனோஜ் சின்ஹா பதவி உயர்வு பெற்றுவிட்டார். ஆனால், நான் பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன்” என்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச முதல்வர் உமர் அப்துல்லா தனது கவலையை தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தும் வகையில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அவருடன் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து செனாப் நதியின் கிளை நதியான ஆஞ்சி ஆற்றின் குறுக்கே, கட்டப்பட்டுள்ள நாட்டின் முதல் கேபிள் ரயில் பாலத்தையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

பின்னர், இப்பாலங்கள் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். ஜம்மு காஷ்மீரின் கத்ராவிற்கும் ஸ்ரீநகருக்கும் இடையே இந்த வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் இந்த முக்கிய திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டதை அடுத்து தலைவர்கள் உரையாற்றும் நிகழ்ச்சி கத்ராவில் நடைபெற்றது.

பிரதமர், துணைநிலை ஆளுநர், மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் உரையாற்றிய உமர் அப்துல்லா, “இந்த ரயில் சேவை ஜம்மு காஷ்மீரின் நீண்ட கால கனவு. இத்திட்டத்தை நிறைவேற்ற பலர் கனவு கண்டார்கள். ஆங்கிலேயர்கள்கூட கனவு கண்டார்கள். ஜீலம் நதியின் குறுக்கே யூரி வரை ரயில் பாதையை கொண்டு வந்து காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்க வேண்டும் என்று அவர்கள் கனவு கண்டார்கள், ஆனால் அவர்களால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியை நான் குறிப்பிட்டு நன்றி சொல்லாவிட்டால் அது தவறாகிவிடும். இந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டபோது நான் 8-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்போது எனக்கு 55 வயது. இறுதியில் இந்தப் பாலம் திறக்கப்பட்டுவிட்டது. இந்த திட்டத்துக்கு அடல் பிஹாரி வாஜ்பாய், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்’ என்ற அந்தஸ்தை வழங்கி பட்ஜெட்டை அதிகரித்தால்தான் இது நடந்தது. இது ஜம்மு – காஷ்மீர் மக்களுக்கு எல்லா வகையிலும் பெரிதும் பயனளிக்கும்.

ஆங்கிலேயர்களால் கூட சாதிக்க முடியாதது உங்கள் கைகளால் (பிரதமர் மோடி) நிறைவேறியுள்ளது. ஜம்மு – காஷ்மீர், காஷ்மீர் பள்ளத்தாக்கு, இப்போது நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் ஜம்மு – காஷ்மீருக்கு பெரிதும் பயனளிக்கும். இது இணைப்பை மேம்படுத்தி சுற்றுலாவை அதிகரிக்கும், உள்ளூர்வாசிகளுக்கு பயனளிக்கும்.

ஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ரயில்வே திட்டங்களிலும் பிரதமருடன் நானும் இருந்து வருகிறேன். இது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். முதலாவதாக, அனந்த்நாக் ரயில் நிலையம் திறக்கப்பட்டபோதும் நான் உடன் இருந்தேன். இரண்டாவதாக, பனிஹால் ரயில் சுரங்கப்பாதை திறக்கப்பட்டபோதும் நான் உடன் இருந்தேன். 2014-ஆம் ஆண்டு கத்ரா ரயில் நிலையம் திறக்கப்பட்டபோது இதே நான்கு பேர் இங்கு இருந்தனர்.

அப்போதைய ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக பதவி பதவி உயர்வு பெற்றார். ஆனால், ​​நான் ஒரு மாநில முதல்வராக இருந்து, தற்போது ஒரு யூனியன் பிரதேசத்தின் முதல்வராக பதவி இறக்கம் செய்யப்பட்டதாக உணர்கிறேன். ஆனால், இது சரிசெய்யப்பட அதிக நேரம் எடுக்காது என்று நான் நம்புகிறேன். உங்கள் கைகள் மூலம், ஜம்மு காஷ்மீர் மீண்டும் ஒரு மாநிலமாக அதன் நிலையை மீண்டும் பெறும்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.