Doctor Vikatan: கருஞ்சீரகம் மரணத்தை தவிர எல்லா நோய்களுக்கும் மருந்தாகுமா?

Doctor Vikatan: கருஞ்சீரகம் என்பது மரணத்தைத் தவிர எல்லா நோய்களையும் தீர்க்கும் மூலிகை என்றும், அதை எல்லோரும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் என்றும் நிறைய செய்திகள், வீடியோக்கள் பார்க்கிறோம். உண்மையிலேயே கருஞ்சீரகத்தை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாமா,எப்படிச் சாப்பிட வேண்டும். எந்தப் பிரச்னைக்கு எடுத்துக்கொள்ளலாம். யார் தவிர்க்க வேண்டும். சமையலில் சேர்க்கலாமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

அரசு சித்த மருத்துவர் வரலட்சுமி

என்னதான் மருத்துவத்தன்மை கொண்டதாக இருந்தாலும் கருஞ்சீரகத்தை யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளக்கூடாது. உடல் சூடு அதிகமுள்ளோர், உடல் வறட்சியடையும் தன்மை கொண்டவர்கள் எல்லாம் கருஞ்சீரகத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது.

ரத்தச் சர்க்கரை அளவைக் குறைப்பதில் கருஞ்சீரகத்துக்குப் பெரும் பங்கு உண்டு. ரத்தம் உறைதல் பிரச்னையையும் தடுக்கும். கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இது நல்லது.

பசி உணர்வைக் கட்டுப்படுத்தும் என்பதால் அதிகம் சாப்பிடுவது தடுக்கப்படும், அதன் மூலம் உடல் எடை குறையும். கருஞ்சீரகம் நோய் எதிர்ப்புத்தன்மை கொண்டது என்பதால் புற்றுநோயாளிகள், சுவாசப்பாதை தொந்தரவு உள்ளவர்களுக்கெல்லாம் பலனளிக்கும். மாதவிடாய் பிரச்னை உள்ளவர்களுக்கும் ஏற்றது.

இத்தனை பிரச்னைகளுக்கு மருந்தாகும் என்றாலும், இந்தப் பிரச்னைகள் உள்ளவர்கள் யாரும் இவற்றை மருத்துவ ஆலோசனையின்றி, தாமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. 

கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும் என்பதால் கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு இது நல்லது.

கருஞ்சீரகத்தை அவரவர் பிரச்னை மற்றும் அதன் வீரியத்தைப் பொறுத்து அளவை கூட்டியோ, குறைத்தோ எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வாதம், பித்தம், கபம்… இவற்றின் அளவைப் பார்த்தும் பரிந்துரைக்கப்படும்.

தவிர, உடல் எடைக்கேற்பதான் அளவு தீர்மானிக்கப்படும். அதையெல்லாம் மருத்துவரால்தான் சரியாகக் கணிக்க முடியும்.

கருஞ்சீரகம் அருமையான மருந்துப்பொருள் என்பதற்காக அதை ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்வதும் தவறு. கர்ப்பிணிகள், தாய்ப்பால் கொடுப்போர், கருஞ்சீரகத்தைத் தவிர்ப்பதே நல்லது. ரத்தம் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவ ஆலோசனையின்றி எடுக்கக்கூடாது. குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டாம்.

சாதாரண சீரகம் போல, கருஞ்சீரகத்தை சமையலில் சேர்க்க முடியாது. இது வெறும் மருந்துப் பொருள் மட்டுமே.

வெறும் கருஞ்சீரகத்தைப் பொடித்து சாப்பிடுமாறு சிலருக்கு அறிவுறுத்தப்படும். சிலருக்கு எள்ளுடன் கலந்து சாப்பிடச் சொல்வோம்.

பேரீச்சம்பழம், எலுமிச்சம் பழம், ஏலக்காய், கரிசலாங்கண்ணி, மிளகு போன்ற சில பொருள்களை கற்ப மூலிகைகள் என்று சொல்வோம். அவற்றை சமையலில் சேர்க்கலாம். கருஞ்சீரகம் அப்படிப்பட்டதல்ல. இதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதும் அவரவர் பிரச்னையைப் பொறுத்து மாறும்.

வெறும் கருஞ்சீரகத்தைப் பொடித்து சாப்பிடுமாறு சிலருக்கு அறிவுறுத்தப்படும். சிலருக்கு எள்ளுடன் கலந்து சாப்பிடச் சொல்வோம். நீரிழிவு உள்ளவர்களுக்கு ஓமம் மற்றும் வெந்தயத்துடன் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொல்வோம். உடல் எடை குறைய வேண்டும் என்பவர்களுக்கு தனியாவோடு கருஞ்சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடிக்கச் சொல்வோம். எனவே, யாருக்கு, எவ்வளவு, எப்படி என்பதை மருத்துவரால்தான் சரியாகப் பரிந்துரைக்க முடியும். யூடியூபில் பார்ப்பதையோ, வாட்ஸ்அப்பில் வரும் ஃபார்வேர்டையோ நம்பி, எல்லோரும் எல்லா மூலிகைகளையும் சாப்பிடுவது என்பது நிச்சயம் ஆபத்தானதுதான்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.