பீஜிங்,
சீனாவில், இளம்பெண்கள் ஆண்களை 5 நிமிடம் கட்டிப்பிடிப்பதற்கு 50 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.600) செலுத்தும் புதிய டிரெண்ட் பிரபலமாகி வருகிறது. இதற்காக அங்கு பிரத்யேக செயலிகள் இயங்கி வருகின்றன. அதில் பெண்கள் தாங்கள் கட்டிப்பிடிக்க விரும்பும் ஆண்களை முன்பதிவு செய்து கொள்கின்றனர்.
பின்னர் வணிக வளாகங்கள், ரெயில் நிலைய சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பொது இடங்களில் இருவரும் சந்தித்து கட்டிப்பிடித்துக் கொள்கின்றனர். இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு பெண்கள் வழங்குகின்றனர். இவ்வாறு கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறைந்து ஆறுதல் கிடைப்பதாக சம்பந்தப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கட்டிப்பிடி வைத்தியத்திற்கு சீன பெண்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக கல்லூரி பெண்கள், அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் ஆகியோர் தங்கள் மன உளைச்சலை போக்கிக் கொள்ள இது மிகச்சிறந்த வழியாக உள்ளது என்று கூறுகின்றனர்.
அவர்கள் கட்டிப்பிடிப்பதற்கு ஒரு ஆணை தேர்வு செய்வதற்கு முன்பாக அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி அறிமுகமாகிக் கொள்கின்றனர். தோற்றம், நடத்தை, பொறுமை மற்றும் உடல்வாகு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு ஆணை தேர்வு செய்வதாகவும், பின்னர் அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் அடைவதாகவும் சம்பந்தப்பட்ட பெண்கள் தெரிவிக்கின்றனர்.