புதுடெல்லி: கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 11 ஆண்டுகளில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை மறுவரையறை செய்துள்ளது. தூய்மை இந்தியா மூலம் கண்ணியத்தை உறுதி செய்வதிலிருந்து ஜன் தன் கணக்குகள் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைகள் வரை பல்வேறு முயற்சிகள் மூலம், நமது பெண்கள் சக்தியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
உஜ்வாலா திட்டம் பல வீடுகளுக்கு புகை இல்லாத சமையலறைகளைக் கொண்டு வந்த ஒரு மைல்கல் சாதனை. முத்ரா கடன்கள், லட்சக்கணக்கான பெண்கள் தொழில்முனைவோர்களாகவும், தங்கள் கனவுகளை சுதந்திரமாகத் தொடரவும் உதவியுள்ளன. பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பெண்களின் பெயர்களில் வீடுகள் வழங்குவது அவர்களின் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளித்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் குழந்தையைப் பாதுகாப்பதற்கான ஒரு தேசிய இயக்கமாக, பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உள்ளது. அறிவியல், கல்வி, விளையாட்டு, புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயுதப்படைகள் உட்பட அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சிறந்து விளங்கி பலரை ஊக்குவித்து வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.