லாஸ் ஏஞ்சல்ஸ்,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல்வேறு-அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதன்படி அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப் பிடிக்கும் அவர் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறவும் உத்தரவிட்டார்.
இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஜனாதிபதி டிரம்ப் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார்.இதையடுத்து நாடு முழுவதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கண்டறிய குடியேற்ற அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டு உள்ளார். தினமும் 3 ஆயிரம் பேரை கைது செய்ய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதன்படி கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சில ஊழியர்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அங்கிருந்த 44 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் நேற்று முன்திமை போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டித்தும் அரசுக்கு எதிராக முழக்க மிட்டபடியும் பேரணியாக சென்றனர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயன்றனர். அவர்கள் மீது தடியடியும் நடத்தினார்கள். இதனால் அந்தபகுதியே போர்க்களம் போல காணப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட வெளிநாடுகளை சேந்த 44 பேருக்கு ஆதரவாக நேற்று பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பொது சொத்துக்களை சேதப்படுத்தினார்கள். வாகனங்களை தீவைத்து எரித்தனர். அதிகாரிகளையும் தாக்கினார்கள். இதனால் அங்கு பெரும் கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் பரவுவதை கட்டுப்படுத்த ஜனாதிபதி டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். அவரது உத்தரவின் பேரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கலவரம் நடந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கலவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.