இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டுக்குமேல் போர் நீடித்து வருகிறது. இந்த போரில் காசாவில் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் காசாவுக்கு இஸ்ரேல் வழியாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதனை இஸ்ரேல் திடீரென தடுத்து நிறுத்தியது. சர்வதேச அளவில் இது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆனால் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹசன் என 12 தன்னார்வலர்கள், நிவாரண பொருள்களை ஏற்றிக்கொண்டு காசாவை நோக்கி கடல் வழியாக ‘மாட்லீன்’ எனும் படகில் பயணம் செய்திருக்கின்றனர்.
கிரேட்டாவையும் அவருடன் வந்த தன்னார்வலர்களையும் இஸ்ரேல் கடற்படையினர் வழிமறித்து கைது செய்திருக்கின்றனர். இதனால் நிவாரண பொருட்களைக் காசாவுக்குள் கொண்டு சேர்க்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்ட கிரேட்டா விளம்பர நோக்கங்களுக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியிருக்கிறது. கிரேட்டா மற்றும் அவருடன் வந்த 12 பேரும் விரைவில் அவரவர் நாடுகளுக்கு, நாடு கடத்தப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.