கடந்த ஆண்டு ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்து மூன்றாவது கோப்பையை வென்று கொடுத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். இருப்பினும் இந்த ஆண்டு மெகா இடத்தில் அவரை விடுவித்தது கேகேஆர் அணி. இதனை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அவரை ஏலத்தில் இரண்டாவது அதிகபட்ச தொகைக்கு எடுத்தது. அதனை நிரூபிக்கும் விதமாக தனது கேப்டன்சி மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடிய அவர் பஞ்சாப் அணியை ஃபைனல் வரை அழைத்துச் சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக பஞ்சாப் அணி ஆர்சிபி இடம் தோல்வியை சந்தித்தது.
ஷ்ரேயாஸ் ஐயர் எழுச்சி!
இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து தனது அதிரடியை காட்டத் தொடங்கினார் ஷ்ரேயாஸ் ஐயர். குறிப்பாக மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை டார்கெட் செய்வதில் சிறந்த வீரராக இருந்து வருகிறார். தற்போது இந்திய அணிக்கு ஒரு நாள் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டன் ஆகவும், டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டன் ஆகவும், டெஸ்ட் போட்டிகளுக்கு சுப்மான் கில் கேப்டன் ஆகவும் இருந்து வருகின்றனர். இதற்கு முன்பு வரை மூன்று தொடர்களுக்கும் ஒரே கேப்டன் தான் இருந்துள்ளார். தற்போது இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளதால் புதிதாக இரண்டு கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விரைவில் ஒரு நாள் போட்டிகளில் இருந்தும் ரோகித் சர்மா ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதிய ஒருநாள் அணிக்கான கேப்டனை பிசிசிஐ தேடி வருகிறது. டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடும் சூரிய குமார யாதவ் ஒரு நாள் போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளார். பலமுறை ஒரு நாள் அணியில் இடம் பெற்றாலும் அவரால் ரன்களை அடிக்க முடியவில்லை. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளங்கி வருகிறார். எனவே ரோகித் சர்மாவிற்கு பிறகு அடுத்த கேப்டனாக ஐயர் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
“தற்போது இந்திய அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆனால் இந்த ஐபிஎல்-க்கு பிறகு அவரை டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீண்ட நாட்கள் விலக்கி வைக்க முடியாது. மேலும் இந்திய அணியின் அடுத்த கேப்டன்சி ரேஸிலும் அவரது பெயர் உள்ளது” என்று பிசிசிஐயின் முக்கிய நபர் தெரிவித்துள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் சேர்த்து மொத்தமாக 120 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடி உள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர். இதில் ஐந்து சதங்கள் மற்றும் 30 அரை சதம் உட்பட 4000 ரன்களை குறித்துள்ளார். விரைவில் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யர் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.