இந்தியாவுடன் மோதல்: பாகிஸ்தான் தூதுக்குழு இங்கிலாந்து பயணம்

லண்டன்,

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மே 7ம் தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழித்தது.

இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. 3 நாட்கள் நடந்த மோதல் இரு தரப்பு ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது. அதேவேளை, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிரான பல்வேறு நாடுகளை ஒன்றிணைக்கவும் அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு இந்தியாவின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தனர்.

இந்நிலையில், இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் எம்.பி.க்கள் அடங்கிய தூதுக்குழுவை நியமித்துள்ளது. இந்த குழுவை அந்நாட்டு முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பிலாவல் புட்டோ சர்தாரி தலைமை ஏற்று நடத்துகிறார்.

9 பேர் அடங்கிய இந்தக்குழு நேற்று அமெரிக்கா சென்றது. அங்கு ஐ.நா. பிரதிநிதிகளுடனும், அமெரிக்க அதிகாரிகளுடனும் இந்தக்குழு ஆலோசனை நடத்தியது. இதில், இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்தக்குழு இன்று இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து அரசின் முக்கிய அதிகாரிகளை சந்திக்கும் இந்தக்குழு பாகிஸ்தான் நிலைப்பாட்டை கூறுகிறது.

அதேவேளை, சிந்து நதி ஒப்பந்தம் உள்பட இந்தியாவுடனான அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகான தயாராக இருப்பதாக பாகிஸ்தான் குழு கூறியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.