India National Cricket Team: இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி (England vs India) விளையாட இருக்கிறது. இதற்காக இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வரும் ஜூன் 20ஆம் தேதியில் இருந்து தொடங்கும் இந்த டெஸ்ட் தொடர் வரும் ஆக. 3ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
England vs India: வலிமை vs இளமை
லீட்ஸ் ஹெட்டிங்லி, பிர்மிங்கமில் எட்ஜ்பாஸ்டன், லண்டனில் லார்ட்ஸ் மற்றும் ஓவல், மான்செஸ்டரில் ஓல்ட் டிரஃபோர்ட் ஆகிய 5 நகங்களிலும் முறையே 5 போட்டிகளும் நடைபெற உள்ளன. சுப்மான் கில் தலைமையிலான இளமையான இந்திய அணி (Team India), பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான வலிமையான இங்கிலாந்து அணியை (Team England) எதிர்கொள்ள காத்திருக்கிறது.
Team India: இந்தியா vs இந்தியா ஏ பயிற்சி போட்டி
இங்கிலாந்தில் இந்திய பிரதான அணி வருவதற்கு முன்னதாகவே அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையிலான இந்திய ஏ அணி (India A Team) அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இங்கிலாந்து லயன்ஸ் உடன் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய ஏ அணி விளையாடியது. இரண்டும் டிராவில் முடிந்தது. இந்த போட்டிகளில் கேஎல் ராகுல், கருண் நாயர், துருவ் ஜூரேல், ஷர்துல் தாக்கூர், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் கவனம் ஈர்த்தனர்.
இந்தச் சூழலில், இன்று முதல் அடுத்த 4 நாள்களுக்கு இந்திய பிரதான அணியுடன், இந்தியா ஏ அணி (India vs India A Practise Match) பெக்கன்ஹாமில் உள்ள கென்ட் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் பயிற்சி போட்டியில் ஈடுபடுகிறது. கடந்த சில நாள்கள் முன்னரே இந்திய அணி வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தது. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மான் கில் (Shubman Gill) ஆகியோர் வலைப்பயிற்சிக்கு முன்னர் வீரர்கள் மத்தியில், இந்தியாவின் அணுகுமுறை குறித்து பேசிய காணொலி ஒன்று பிசிசிஐயால் வெளியிடப்பட்டது. இந்த வீடியோவும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வந்தது.
England vs India: கில்லுக்கு டபுள் நெருக்கடி
25 வயதில் இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன்ஸியை பெற்றிருக்கும் கில், இதுவரை வெளிநாடுகளில் அதுவும் டெஸ்ட் போட்டிகளிலும் மிகவும் சுமாரான பேட்டிங்கையே வெளிக்காட்டி உள்ளார். தற்போது கேப்டன்ஸி அழுத்தத்துடன் பேட்டிங்கையும் அவர் சீர்தூக்க வேண்டும். அதேபோல், கம்பீரை பொறுத்தவரை அவரும் இந்த இளம் இந்திய அணியை கொண்டு இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்.
England vs India: நாடு திரும்பிய கௌதம் கம்பீர்
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) அவசர அவசரமாக இந்தியா திரும்பி உள்ளார். அவரது தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் நாடு திரும்பியிருக்கிறார். கடந்த ஜூன் 11ஆம் தேதி அன்று கௌதம் கம்பீரின் தாயார் சீமா கம்பீருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர நாடு திரும்பியிருக்கிறார்.
இன்று நடைபெறும் பயிற்சிப் போட்டியை உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோஷேட் மேற்பார்வையிடுவார் எனலாம். பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மார்கல் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் ஆகியோரும் இந்திய அணிக்கு உதவிகரமாக இங்கிலாந்தில் இருக்கிறார்கள். கௌதம் கம்பீர் வரும் ஜூன் 17ஆம் தேதி மீண்டும் இந்திய அணியுடன் இணைவார். வரும் 20ஆம் தேதிதான் லீட்ஸ் ஹெட்டிங்லீ மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கிறது.