முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகள்: ஜூன் 18-க்குள் அறிக்கை அளிக்க காவல் துறை அறிவுறுத்தல்

மதுரை: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளை காவல் துறை விதித்துள்ளது. இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் ஏற்பாடுகளை நிறைவேற்றி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதுரை ரிங்ரோடு பகுதியில் இந்து முன்னணி அமைப்பு சார்பில், முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டு பந்தல், மேடை அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடக்கின்றன. இந்த மாநாட்டில் பங்கேற்போர், முருகனின் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை பார்க்கும் விதமாக மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த மாநாட்டுக்கான அனுமதி கேட்டு மாநாட்டு பொறுப்பாளர்கள், மதுரை மாநகர காவல் துறையை அணுகினர். லட்சக்கணக்கான பக்தர்கள், மக்கள் கூடும் நிலையில், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 52 நிபந்தனைகளை விதித்து, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து காவல் துறையினர் கூறியது: “இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்க வாய்ப்புள்ளது. தமிழகத்திலுள்ள மண்டலங்கள், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு வண்ண நிறத்தில் அனுமதி பாஸ்கள் வழங்க வேண்டும். தனித்தனி பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். விஐபிக்கள், மேடையில் பங்கேற்பவர்களுக்கென பிரத்யேக பார்க்கிங் வசதிகளை உருவாக்க வேண்டும். போதிய வழிகளை அமைக்க வேண்டும்.

மாநாட்டில் பங்கேற்கும் ஆண், பெண்களுக்காக மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கவேண்டும். கழிப்பறைகள், மருத்துவக் குழுக்கள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் தொட்டிகள் ஏற்படுத்த வேண்டும். மாநாட்டு மேடை மற்றும் நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும். பார்க்கிங்கில் நிறுத்திய வாகனங்களை தன்னார்வலர்களை கொண்டு கண்காணிக்க வேண்டும். வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து எத்தனை வாகனங்கள் வருகின்றன என்ற பட்டியல் வழங்க வேண்டும். மீட்பு வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும்.

மாநாடு நடக்கும் இடத்துக்கு மாநகராட்சியிடம் இருந்து முறையான அனுமதியை பெறவேண்டும். மாநாடு பகுதியில் வழங்கும் உணவுகளுக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளிடம் அனுமதி தேவை, பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கர்ப்பிணி, முதியவர்களை தவிர்க்க வேண்டும். மாநாட்டு திடலில் ஆறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களை அமைக்க, முறையாக சம்பந்தப்பட்ட கோயில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் முன் அனுமதியை பெறவேண்டும், ரிங்ரோடு என்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தாமல், காவல் துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை விதித்துள்ளோம்.

இவற்றில் முன்கூட்டியே மேற்கொள்ளும் பணிகளை நிறைவேற்றி அதற்கான விவரங்களை காவல் துறையிடம் ஜூன் 18-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும். இது தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளோம். மக்களின் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை கருதியே இது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.