அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுள் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். இந்த கோர விபத்தில் அவரது அதிர்ஷ்ட எண்ணே, துரதிர்ஷ்டமாக மாறிய சோகம் நடந்துள்ளது.
அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமானத்தில் உயிரிழந்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்தத் தலைவரான விஜய் ரூபானியும் (68) ஒருவர். லண்டனில் உள்ள தனது மகளைச் சந்திப்பதற்காக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். இருப்பினும், துரதிர்ஷ்டவசமாக ரூபானி விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அகமதாபாத் நகரில் இருந்து பிரிட்டன் நாட்டின் லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இதில் விமானத்தில் பயணித்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் என 242 பேரில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.
விஜய் ரூபானி 1206 என்ற எண்ணை தனது அதிர்ஷ்ட எண்ணாக பயன்படுத்தி வந்தார். தனது வாகன பதிவெண்களில் கூட அந்த எண்ணையே அவர் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில், ஜூன் 12-ம் நடந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது ‘1206’ என்ற அதிர்ஷ்ட எண்ணான 12.06 தேதியில் அவர் இறந்தது அதிர்ஷ்ட எண்ணே துரதிர்ஷ்டமாக மாறியுள்ளது என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.
விமானத்தில் அவரது இருக்கை எண் 12. பயணம் செய்த நேரம் பிற்பகல் 12:10 மணி. இது 12 என்ற எண்ணுடனான அவரது நம்பிக்கையை காட்டுவதாகவும் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
மியான்மரில் 1956, ஆகஸ்ட் 2-ம் தேதியில் பிறந்த விஜய் ரூபானி, 1996 முதல் 1997 வரை ராஜ்கோட் மேயராகவும், 2006 முதல் 2012 வரையில் மாநிலங்களவை எம்.பி.யாகவும்ம், 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரையில் வரையில் குஜராத் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பாஜகவின் மூத்தத் தலைவரான ரூபானி, குஜராத் போக்குவரத்து, தொழிலாளர் மற்றும் நீர்வழங்கல் துறைகளிலும் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.