டெல் அவிவ் / தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் கடுமையான பதிலடி தாக்குதலை மேற்கொண்ட நிலையில், “ஈரானின் ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம்” என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புதிய மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “அயதுல்லா ஆட்சியின் கீழ் உள்ள ஈரான் தேசத்தின் ஒவ்வொரு ராணுவத் தளம், அணுசக்தி ஆராய்ச்சி மையம் என அங்குள்ள எங்களது ஒவ்வொரு இலக்கையும் குறிவைத்து தாக்குவோம். இதுவரை அவர்கள் எதிர்கொண்ட தாக்குதலை காட்டிலும் வரும் நாட்களில் ஈரான் மீது நாங்கள் நடத்த உள்ள தாக்குதலை ஒப்பீடு கூட செய்ய முடியாது. அந்த அளவுக்கு எங்களது தாக்குதல் தீவிரமாக இருக்கும்.
இப்போது தொலைதூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை தயாரிக்கும் ஈரானின் திறனை அழிக்கும் வகையில் இஸ்ரேல் ராணுவம் இயங்கி வருகிறது” என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். இதனிடையே, ‘ஈரான் தலைநகர் தெஹ்ரான் பற்றியெரியும்’ என எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலே, ‘ஈரான் முழுவதும் உள்ள பல்வேறு ராணுவத் தளங்களை குறிவைத்து தற்போது தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை மாலை செய்திக் குறிப்பு ஒன்றில் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.
அதேவேளையில், இஸ்ரேலின் முக்கிய நகரங்களின் ராணுவ நிலைகளைக் குறிவைத்து ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தச் சேதங்களை வெளியுலகுக்கு தெரியாதவாறு மறைக்கும் வகையில் சர்வேத ஊடகங்களுக்கும், உள்ளூர் ஊடகங்களுக்கும் இஸ்ரேல் அரசு கடும் கெடுபிடிகளைக் காட்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், சமூக ஊடகங்கள் வாயிலாக, சேதங்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் வைரலாகி வருகின்றன.
தாக்குதலும் பதிலடியும்: அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் ஈரான் மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப் படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட 78 பேர் உயிரிழந்தனர்; 320 பேர் காயம் அடைந்தனர்.
முதல்கட்ட தாக்குதலின் தொடர்ச்சியாக, வெள்ளிக்கிழமை மாலையும் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் சனிக்கிழமை அதிகாலையில் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்’ என்று பெயரிட்டு பதிலடியாக ஈரான் வீசிய ஏவுகணைகள் மூலம் ‘அயர்ன் டோம்’ வான்பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவத் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகள் மீதும் குண்டுகள் விழுந்தன. இந்த தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் வெளியாகின.
“மத்திய கிழக்கில் தற்போதைய பதற்றத்துக்கு காரணமே ஈரான் தான். அணு ஆயுதங்களை தயாரித்து இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிடுகிறது. அதனால்தான் நாங்கள் அணு ஆயுதத் தளங்களை குறிவைத்து துல்லிய தாக்குதல் நடத்தினோம். ஆனால், இஸ்ரேலில் மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்துகிறது” என்று இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் நடாவ் ஷோசானி தெரிவித்தார்.
அதேவேளையில், ஈரான் தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேலுடன் போரிட ஈரான் ராணுவப் படைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரான் மக்கள் அனைவரும் ஈரான் ராணுவத்துக்கு ஆதரவாக உள்ளனர்” என்றார். மேலும், இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வழங்கினால், ஈரானில் உள்ள அந்த மூன்று நாடுகளின் நிலைகள் மீதும் குறிவைத்து தாக்குவோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்தது.
இந்தப் பின்னணியில், “ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடரும் பட்சத்தில், அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரான் பற்றியெரியும்” என இஸ்ரேல் அரசு எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்கது.
இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – இதனிடையே ஈரான் உடனான போர் தொடர்பாக இஸ்ரேலை கண்டிக்கும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) அறிக்கை தொடர்பான விவாதத்தில் இந்தியா பங்கேற்கவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்தியா வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளை பின்பற்றுமாறு இரு தரப்பினரையும் நாங்கள் வலியுறுத்துகிறோம். சர்வதேச சமூகம் இந்த திசையில் முயற்சிகளை மேற்கொள்வது அவசியம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு: இஸ்ரேல் – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால், இந்தியாவுக்கான பிரென்ட் கச்சா எண்ணெய் விலை சனிக்கிழமை ஒரே நாளில் பேரலுக்கு 6 டாலர் உயர்ந்து 78 டாலரானது. இந்தப் போர் தீவிரமானால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
விமான சேவை பாதிப்பு: இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரால் அவற்றின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் உலகின் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லண்டன், துபாய், அபுதாபி, ரியாத், பிராங்பர்ட் போன்ற விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.