கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழப்பு – நடந்தது என்ன?

உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் விமானி உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

உத்தராகண்டில் சார்தாம் என்றழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி ஆகிய புனித தலங்கள் அமைந்துள்ளன. இதில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கேதார்நாத் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் முதன்மையானது. சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பனிக் காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடைக்காலத்தில் 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும்.

இந்த ஆண்டு கடந்த மே 2-ம் தேதி கேதார்நாத் கோயில் திறக்கப்பட்டது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஹெலிகாப்டர் சேவை இயக்கப்படுகிறது. இதற்காக கேதார்நாத்தில் 3 ஹெலிபேட் தளங்கள் உள்ளன. இங்கிருந்து 9 தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவைகளை இயக்கி வருகின்றன. ஒரு ஹெலிகாப்டரில் விமானி உட்பட 7 பேர் பயணம் செய்ய முடியும். நாள்தோறும் 1,500 பேர் ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் கோயிலுக்கு வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் கேதார்நாத் கோயிலில் வழிபாடு நடத்திய 6 பக்தர்கள், கேதார்நாத்தில் இருந்து நேற்று ஹெலிகாப்டர் மூலம் குப்தகாஷிக்கு சென்றனர். விமானி ராஜ்வீர் சிங் சவுகான் ஹெலிகாப்டரை இயக்கினார். இந்த ஹெலிகாப்டர் கவுரிகண்ட்- சோன்பிரயாக் வனப்பகுதியில் பறந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்தனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி சடலங்களை மீட்டனர்.

மகாராஷ்டிராவை சேர்ந்த ராஜ்குமார் சுரேஷ் (41), அவரது மனைவி சாரதா (35), அவர்களது பெண் குழந்தை காசி (2), உத்தர பிரதேசத்தை சேர்ந்த வினோத் தேவி (66), அவரது பேரன் திரிஸ்டி சிங் (19), உத்தராகண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம், ரான்சி பகுதியை சேர்ந்த விக்ரம் (46), ராஜஸ்தானை சேர்ந்த விமானி ராஜ்வீர் சிங் சவுகான் ஆகிய 7 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஹெலிகாப்டர் விபத்தில் பக்தர்கள் உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மீட்புப் படை வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி சோனியா கூறும்போது, “மோசமான வானிலை காரணமாக ஆர்யான் அவிட்டேசன் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியிருக்கிறது. அடுத்த 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது” என்று தெரிவித்தார்.

கேதார்நாத் புனித யாத்திரை ரத்து: கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது. குறிப்பாக சோன்பிரயாக் பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து கேதார்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது. கோயிலுக்கு வருகை தந்த பக்தர்கள் தங்கள் பயணத்தை தொடரக்கூடாது. அவரவர் தங்கியுள்ள இடங்களை விட்டு வெளியேறக்கூடாது. பாதைகள் சீரமைக்கப்பட்ட பிறகு புனித யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக மோசமான வானிலை காரணமாக ருத்ரபிரயாக் சாலையில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் பயணம் செய்த பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடந்த 6 வாரங்களில் மட்டும் அடுத்தடுத்து 5 ஹெலிகாப்டர் விபத்துகள் நேரிட்டு உள்ளன. எனவே ஹெலிகாப்டர் சேவையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தராகண்ட் அரசு முடிவு செய்துள்ளது.

உயர்நிலைக் குழு விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து உத்தராகண்ட் அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹெலிகாப்டர் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகே சார்தாம் புனித யாத்திரைக்கான ஹெலிகாப்டர் சேவை மீண்டும் தொடங்கப்படும்.

தலைநகர் டேராடூனில் ஹெலிகாப்டர் சேவைகளுக்கான கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும். இந்த மையத்தில் விமான போக்குவரத்து இயக்குநரகம், தேசிய பேரிடர் மீட்புப் படை, விமான போக்குவரத்து துறை, ஹெலிகாப்டர் சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் இணைந்து பணியாற்றுவார்கள், கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக உயர்நிலைக் குழு விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். தவறுகள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அனுபவம் உள்ள விமானிகளை மட்டுமே பணியமர்த்த வேண்டும். மோசமான வானிலையின்போது ஹெலிகாப்டர்களை இயக்கக்கடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். ஹெலிகாப்டர் பயணத்தின்போது பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விதிகளை வரையறுக்க தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைக்க முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.