இந்தியா -பாக் போல இஸ்ரேல் – ஈரான் போரை நிறுத்த வேண்டும் – டிரம்ப்

வாஷிங்டன்,

மத்திய கிழக்கில் எலியும், பூனையுமாக இருக்கும் ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் ராணுவ மோதலில் ஈடுபட்டு உள்ளன. தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்தேதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.

‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் தொடங்கிய இந்த ராணுவ நடவடிக்கை, தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என இஸ்ரேல் அறிவித்தது. அதன்படி ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகள், ராணுவ நிலைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் துல்லியமாக தாக்கியது.இந்த தாக்குதலில் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகள், மேலும் முக்கிய அணுசக்தி மையமான நட்டன்ஸ், இஸ்பகான் உள்பட பல அணுசக்தி மையங்கள் தகர்க்கப்பட்டன.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த திடீர் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், 9 அணு ஆயுத விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார்.

இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ஜெருசலேம், டெல் அவிவ் என இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்கியது.இதில் பலவற்றை இஸ்ரேல் ராணுவம் நடுவானில் இடைமறித்து அழித்தாலும், சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் இஸ்ரேலின் பலம் பொருந்திய அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பையும் உடைத்துக்கொண்டு பல இடங்களை தாக்கியது.

நேற்று முன்தினமும் நீடித்த ஈரானின் இந்த பதிலடியில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியானது.

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் 3-வது நாளாக நேற்றும் நீடித்தது. குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் மட்டுமின்றி நாடு முழுவதும் பரவலாக குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.குறிப்பாக டெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இஸ்ரேல் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் அங்குள்ள எண்ணெய் கிடங்கும் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் எண்ணெய் கிடங்கு பற்றி எரிவதாகவும், பல அடி உயரத்துக்கு தீ ஜுவாலைகள் எழுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் கியாஸ் வினியோகம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.ஈரானின் பல்வேறு பகுதிகளில் புதிதாக நடந்த இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து தகவல் வெளியாகவில்லை.மறுபுறம் ஈரானும் இஸ்ரேலின் பல பகுதிகளை நேற்றும் தாக்கியது. இதில் ஹைபா நகரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை சேதம் அடைந்தது. இதனால் ஆலையின் செயல்பாடு முடங்கியது.

இதைப்போல டெல் அவிவ் நகர் அருகே நடந்த தாக்குதல்களில் குடியிருப்புகள் சேதம் அடைந்தன. அங்கே ஏராளமான அடுக்குமாடி கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பதாகவும், அதில் வசித்து வந்த மக்கள் தங்கள் உடைமைகளுடன் வெளியேறி வருவதாகவும் ஊடக பணியாளர் ஒருவர் தெரிவித்தார்.நாட்டின் பல பகுதிகளில் நேற்று நடந்த தாக்குதல்களில் 10 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் அதிகமானோர் காயம் அடைந்து உள்ளனர். இதன் மூலம் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்து உள்ளது.

முன்னதாக ஈரானின் நட்டன்ஸ், இஸ்பகான் அணுசக்தி மையங்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்ய பல வாரங்கள் ஆகும் என கண்டறியப்பட்டு உள்ளது.ஈரானின் அணு சக்தி மையங்கள், ராணுவ தளங்களை தாக்கிய இஸ்ரேல், அடுத்ததாக ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் மீது கவனம் செலுத்தி உள்ளது. அங்கே இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் அவிசய் அட்ரீ கூறியுள்ளார்.

இதன் மூலம் அந்த பகுதிகளை இஸ்ரேல் ராணுவம் குறி வைத்திருப்பதாக தெரிகிறது. முன்னதாக ஈரானின் ராணுவ அமைச்சக தலைமையகத்தை தாக்கியதாகவும் இஸ்ரேல் அறிவித்து இருந்தது.இதைப்போல ஈரானும் இஸ்ரேலை தாக்குவதில் இருந்து பின்வாங்குவதாக தெரியவில்லை. இதனால் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இரு தரப்பினரும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்ளுமாறும், தாக்குதலை நிறுத்துமாறும் உலக தலைவர்கள் அவசரமாக அறிவுறுத்தி உள்ளனர்.அதேநேரம் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் மட்டுமே நாங்களும் நிறுத்துவோம் என ஈரான் அறிவித்து உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரானும், இஸ்ரேலும் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். நான் வர்த்தகத்தை பயன்படுத்தி இரண்டு சிறந்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதலை முடிவுக்கு கொண்டு வந்தேன். எகிப்து மற்றும் எத்தியோப்பியா இடையே நைல் நதியில் அணைக்காக ஏற்பட்ட சண்டையில் எனது தலையீட்டால் இப்போது அமைதி நிலவுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும். அதேபோல், இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் விரைவில் அமைதி ஏற்படும்.

ஈரான் உச்ச தலைவர் கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது எனது தலையீட்டால் அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். விரைவாக நல்ல முடிவு எடுத்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்தியா -பாகிஸ்தான் போரை நிறுத்த நான் எடுத்த முயற்சிகளை ஏற்றுக்கொண்டு அந்த தலைவர்கள் செயல்பட்டது போல இஸ்ரேல் மற்றும் ஈரான் தலைவர்களும் போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.