மும்பை,
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாநிலத்தில் மழை காரணமாக சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல இடி, மின்னலுடன் மழை பெய்தது. எனவே வெள்ளத்தில் மூழ்கியும், மின்னல் தாக்கியும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை, சிந்துதுர்க், துலே, நாசிக், சம்பாஜிநகர், நந்துர்பர், அமராவதி ஆகிய இடங்களில் மழைக்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ரத்னகிரியில் 8.8 செ.மீ. மழை பதிவானது. இதேபோல ராய்காட்டில் 6.5 செ.மீ., சிந்துதுர்க்கில் 4.3 செ.மீ., தானேயில் 3 செ.மீ., யவத்மாலில் 3 செ.மீ. மழை பதிவாகி உள்ளது,” என்றார்.