கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 29 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூன் 17) இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த தரைக் காற்று வீசக்கூடும். ஓரிரு இடங்களில் 22-ம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும்.
இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்திலும், நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40-55 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 29 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 18 செ.மீ., நீலகிரி மாவட்டம் மேல்பவானியில் 17 செ.மீ., பார்சன்வேலி, பந்தலூரில் 13 செ.மீ., கோவை மாவட்டம் சோலையாறு, சின்கோனா, நீலகிரி மாவட்டம் விண்ட்வொர்த் எஸ்டேட்டில் 12 செ.மீ., கோவை மாவட்டம் வால்பாறை, ‘உபாசி’யில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.