சென்னை: அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி சென்றுள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு, அங்குள்ள தமிழ் அமைப்புகள் சார்பில், ‘எம்எஸ்எம்இ நண்பன் மற்றும் சாதனையாளர்’ விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. தமிழக குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அரசு முறைப் பயணமாக, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதலில் நேற்று முன்தினம் பிரான்ஸ் சென்ற அவர், பாரிஸில் நடைபெறும் புத்தாக்க கருத்தரங்கில் பங்கேற்றார். அப்போது, பிரான்சில் உள்ள இந்திய வம்சாவளியினரின் சர்வதேச அமைப்பு (ஜிஓபிஐஓ) சார்பில், ‘எம்எஸ்எம்இ சாதனையாளர் விருது’ வழங்கப்பட்டது. விருதை ஜிஓபிஐஓ அமைப்பின் தலைவர் ராஜாராம் வழங்கினார்.
சிறப்பான பணி: அப்போது அவர் பேசும் போது, “தமிழகத்தின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறையின் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது” என தெரிவித்தார். இதையடுத்து நேற்று அமைச்சர் அன்பரசன், ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில், விளையாட்டு தொடர்பான புத்தாக்க நிறுவனம் தொடர்பான சந்திப்பில் பங்கேற்பதற்கு முன்னதாக அவர் அங்குள்ள பிராங்க்பர்ட் தமிழ்ச்சங்க விழாவில் பங்கேற்றார். அங்கு அமைச்சருக்கு, ஜிஐபிஏ அமைப்பு சார்பில் ‘எம்எஸ்எம்இ நண்பன் விருது’ வழங்கப்பட்டது.
நிகழ்வில், பிராங்க்பர்ட் தமிழ் சங்கத் தலைவர் பாலாஜி, இந்திய துணைத் தூதரகத்தின் கவுன்சில் ஜெனரல் பி.எஸ்.முபாரக் ஜிஐபிஏ சார்பில் பி.செல்வகுமார் மற்றும் க.நிர்மல்ராமன் ஆகியோர் பங்கேற்றனர். அமைச்சர் அன்பரசனுடன், ஸ்டார்ட்-அப் தமிழ்நாடு நிறுவனத்தின் இயக்குநர் சிவராஜா ராமநாதன், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் புத்தாக்க நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உடனிருந்தனர்.