நெலமங்களா,
கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவராமபுராவை சேர்ந்தவர் பிரஜ்வல் (வயது 22). அதே பகுதியில் வசித்து வந்தவர் சகானா (21). இவர்கள் 2 பேரும் நடன கலைஞர்கள் ஆவார்கள். பிரஜ்வல் மற்றும் சகானா சில சினிமா படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி உள்ளனர். இதுதவிர திருமணம், திருவிழாக்கள், சுப நிகழ்ச்சிகளிலும் 2 பேரும் நடனமாடி வந்தார்கள்.
அதன்படி, துமகூரு மாவட்டம் குனிகல்லில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று முன்தினம் இரவு பிரஜ்வல், சகானா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவுக்கு புறப்பட்டனர். இரவு 11.30 மணியளவில் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே பெங்களூரு-குனிகல் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அதே சாலையில் வந்த லாரி அவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பிரஜ்வல், சகானா ஆகியோர் பலத்தகாயம் அடைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்ததும் நெலமங்களா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது லாரியை டிரைவர் கவனக்குறைவாகவும், வேகமாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.
இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை கைது செய்தனர். மேலும் லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.