கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் சந்தோஷ்குமார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் சந்தோஷ் ஒரு வீட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பை பிடிக்கும்போது, எதிர்பாராத விதமாக அவரைக் கடித்துவிட்டது.

மிகவும் ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ் கடந்த மார்ச் 19-ம் தேதி உயிரிழந்தார். அந்த குடும்பம் சந்தோஷின் வருமானத்தை மட்டுமே சார்ந்திருந்தது. அவரின் மறைவால் குடும்பத்தினர் மிகவும் சிரமப்பட்டனர்.
சந்தோஷின் மூத்த மகள் அனாமிகா மாற்றுத்திறனாளி. இளைய மகள் அருகில் உள்ள அரசுப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். அனாமிகாவை அருகில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையால் சந்தோஷின் மனைவி சரண்யாவால் வேலைக்கு செல்ல முடியவில்லை. மேலும் சரண்யாவும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவர்கள் வாடகைக்கு தங்கியுள்ள வீடும் சரியான கதவு கூட இல்லாமல் மோசமான நிலையில் இருந்தது. இதுதொடர்பான ஆனந்த விகடன் இதழில் 9.4.25 தேதியும், அதன் தொடர்ச்சியாக விகடன் இணையதளத்தில் 12.5.25 தேதியும் கட்டுரை வெளியிடப்பட்டது.
இலவச வீட்டுக்கான ஆணை
மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அரசு அவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தன்னார்வலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். நமது செய்தி வெளியான உடனே, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் சரண்யாவை அழைத்து, வீட்டு வசதி வாரியம் சார்பில் பெரிய நாயக்கன்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலவச வீட்டுக்கான ஆணையை வழங்கினார்.

மேலும் பல சமூக ஆர்வலர்களும், நல் உள்ளங்களும் சந்தோஷின் குடும்பத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள். ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர் மறுவாழ்வுக்காக இயங்கி வரும் ‘சரணாலயம்’ என்ற தொண்டு நிறுவனம், சந்தோஷின் 2 மகள்களுக்கு கல்வி, சரண்யாவுக்கு வேலை வாய்ப்பு தருவதாக கூறியுள்ளனர்.
அனாமிகவுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவர்கள் முன் வந்துள்ளனர். மேலும், சில நல்ல உள்ளங்கள் சரண்யா தொழில் தொடங்குவதற்கு உதவி செய்வதாக கூறியுள்ளனர். விகடன் ஹெல்ப் டெஸ்க் மூலமாக சந்தோஷ் குடும்பத்துக்கு தற்போதுவரை ரூ.2 லட்சம் நிதியுதவி சென்றுள்ளது.
அதேபோல குடும்பத்துக்கு தேவையான மளிகை, அரிசி உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. இது அவர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் என்று நம்புகிறோம். இதுகுறித்து சரண்யாவிடம் பேசியபோது, “இது எங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பேருதவி. கோவை மாவட்ட ஆட்சியர், விகடன் மற்றும் உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.” என்றார்.
நமது செய்தியை அடுத்து சந்தோஷ் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் கொடுத்த வாசகர்கள், உதவி செய்த கோவை மாவட்ட ஆட்சியர், அமைப்புகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் விகடனின் நன்றிகள்.!