அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் நேற்று கூறும்போது, ‘‘டிஎன்ஏ பரிசோதனையில் இதுவரை 99 உடல் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 87 பேரின் அடையாளம் தெரியவந்துள்ளது. இதில் 64 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
இந்த விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது உடல் ராஜ்கோட்டில் முழு அரசு மரியாதையுடன் நேற்று மாலை தகனம் செய்யப்பட்டது.