திருப்பதி: ஆந்திராவில் மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டை போன்று, இந்த ஆண்டும் நஷ்டம் அடைந்து விட கூடாது எனும் எண்ணத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒரு கிலோ மாங்காய் குறைந்தபட்சம் ரூ.12க்கு விவசாயிடமிருந்து பெற வேண்டுமெனவும், இதில் ரூ. 4 அரசு மானியம் வழங்கும் எனவும் அறிவித்துள்ளார். இதனை மாம்பழ விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று திருப்பதியில் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “திருப்பதி மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு மொத்தம் 14,582 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5.5 லட்சம் மெட்ரிக் டன் அளவு மாம்பழம் விளைச்சலாகி உள்ளது. திருப்பதி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 8 மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் உள்ளன.
கிலோவுக்கு ரூ.12.. குறைந்த பட்சமாக கிலோவுக்கு ரூ.12 வரை விவசாயிகளிடம் இருந்து மாங்காய் வாங்கப்படுகிறது. இதில் ரூ.4 அரசு மானியமாக வழங்கப்படுகிறது” என்றார். அப்போது, தமிழக விவசாயிகள் கொண்டு வந்த மாங்காய்கள் ஆந்திர எல்லைக்குள் அனுமதிக்கப்பட வில்லை. தமிழகத்திலிருந்து வரும் மாங்காய்கள் வாங்கப்பட மாட்டாதா? என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.அப்போது ஆட்சியர் வெங்கடேஸ்வர் கூறும்போது, “ஆம். ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து மாங்காய்கள் வாங்கப்பட்டு வந்தன.
ஆனால் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த சித்தூர் மாவட்டத்திலேயே சுமார் 5.5 லட்சம் டன் தோத்தாபுரி மாங்காய் உற்பத்தி நடந்துள்ளது. எனவே, வெளி மாநிலங்களில் இருந்து மாங்காய்களை வாங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆந்திர அரசு, இந்த ஆண்டு மானியம் வழங்குவதால் வெளிமாநில மாங்காய்களை நம்மால் வாங்க முடியாது. அந்தந்த மாநில அரசுகள் அவர்கள் மாநிலத்தின் மா விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மானியம் வழங்கினால் இந்த நிலை ஏற்படாது. இரு மாநில அரசுகளும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்” என்றார்.