தென்காசி: சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் அருகேயுள்ள கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் என்ற இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வந்தார்.
இங்கு 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த வாரம் இந்த முதியோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட முதியோருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செங்கோட்டை சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டி முருகம்மாள் (45), மதுரை தனலட்சுமி (70) ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதையடுத்து, முதியோர் இல்லத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இல்ல நிர்வாகி ராஜேந்திரனை சாம்பவர்வடகரை போலீஸார் கைது செய்தனர். முதியோர் இல்லத்தில் உள்ள அனைவரையும் மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். பாதிப்பு அதிகமுள்ள 12 பேர் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இடைகால் கிராமத்தைச் சேர்ந்த முப்புடாதி (50) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் இருப்பவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.