கோவை அணியை வீழ்த்தி திருச்சி கிராண்ட் சோழாஸ் அசத்தல் வெற்றி

சேலம்,

டி.என்.பி.எல். தொடரில் சேலத்தில் இன்று நடைபெற்று வரும் 15-வது லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் – லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கோவை பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாசீம் அகமது – சுஜய் சிவசங்கரன் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் வாசீம் அகமது 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெகதீசன் கவுஷிக் 5 ரன்களிலும், சிவசங்கரன் 25 ரன்களிலும், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சய் யாதவ் 27 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

திருச்சி அணியின் பேட்ஸ்மேன்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்தது. இறுதி கட்டத்தில் ராஜ்குமார் அதிரடியாக விளையாடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தினார். கோவை அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 24 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்தது. கோவை தரப்பில் சுப்ரமணியன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 169 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை அணியின் சார்பில் ஜிஜேந்திர குமார் மற்றும் லோகேஸ்வர் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் ஜிஜேந்திர குமார் 7 ரன்னில் வெளியேற, அவரைத்தொடர்ந்து லோகேஸ்வர் 11 ரன்களும், அடுத்து களமிறங்கிய கேப்டன் ஷாரூக் கான் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய சச்சின் மற்றும் ஆண்ட்ரே சித்தார்த் இணை சீரான வேகத்தில் ரன்களை சேர்த்து வந்தநிலையில், அந்த ஜோடியில் சச்சின் 38 ரன்களில் கேட்ச் ஆனார். அவரைத்தொடர்ந்து சித்தார்த் 39 ரன்களும், அடுத்து களமிறங்கிய ராகவேந்திரன் 7 ரன்களும், மணிமாறன் சித்தார்த் 4 ரன்னும், ரோகித் 7 ரன்களும், புவனேஷ்வரன் 1 ரன்னும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்.

முடிவில் மாதவ பிரசாத் 22 ரன்களும், ஜாதவேத் 4 ன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் கோவை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து154 ரன்கள் மட்டுமே எடுத்தது.

திருச்சி அணியின் சார்பில் அதிகபட்சமாக அதிசயராஜ் டேவிட்சன் 3 விக்கெட்டுகளும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதன்மூலம் லைகா கோவை கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.