திருமலை: திருப்பதி விமான நிலையத்திற்கு ஏழுமலையானின் பெயரை சூட்டும்படி மத்திய அரசுக்கு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் ஒருமனதாக பரிந்துரைத்துள்ளது.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று பிஆர் நாயுடு தலைமையில் அவசர அறங்காவலர் குழு கூட்டம் நடந்தது. இதில் பல தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு மற்றும் நிர்வாக அதிகாரி சியாமள ராவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
திருப்பதி விமான நிலையத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சர்வ தேச விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்ய வலியுறுத்தி மத்திய விமானத்துறைக்கு பரிந்துரை செய்ய தீர்மானிக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா மற்றும் துணை முதல்வர் டி.கே சிவக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க தற்போது பெங்களூருவில் உள்ள தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் விஸ்தரிக்கப்பட்டு பெரிய கோயிலாக கட்டப்படும்.
திருப்பதி தேவஸ்தானத்திற்கு 100 எலக்ட்ரிக் பஸ்கள் வழங்குவதாக மத்திய அமைச்சரான குமாரசாமி உறுதி அளித்துள்ளார். அதுவும் விரைவில் நடைமுறைக்கு வரும். விரைவில் திருப்பதியில் தண்ணீர், நெய், மற்றும் உணவு பொருட்களை பரிசோதனை செய்யும் மத்திய அரசின் சிஎஸ்ஐஆர் பரிசோதனை மையம் விரைவில் அமைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.