இந்திய அணியில் விராட் கோலி இல்லாதது வருத்தம் அளிக்கிறது: பென் ஸ்டோக்ஸ்

லீட்ஸ்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நாளை தொடங்குகிறது. கேப்டன் ரோகித் சர்மா, நட்சத்திர வீரர் விராட் கோலி ஆகியோர் கடந்த மாதம் டெஸ்டில் இருந்து விடைபெற்றதால் புதிய கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இந்த தொடரில் களம் இறங்குகிறது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றதில்லை என்ற நிலையை மாற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இந்த நிலையில் டெஸ்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற்றது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில், ‘இந்த தொடரில் விராட் கோலியின் போராட்ட குணம், உத்வேகம் மற்றும் வெற்றிக்கான ஆர்வம் ஆகியவற்றை இந்திய அணி இழக்கிறது. விராட்கோலியின் 18-ம் நம்பர் சீருடையை இனிமேல் அந்த அணியில் வேறு யாரும் அணிந்து இருப்பதை பார்க்க முடியாது என்பது சற்று ஏமாற்றம் தான். ஆனாலும் அவர் அந்த அணியின் வீரர்களுக்கு முன்னுதாரணமாக நீண்ட காலம் இருப்பார்.

விராட் கோலி ஓய்வை அறிவித்த பிறகு நான் அவருக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பினேன். அதில் உங்களுக்கு எதிராக விளையாட முடியாமல் போவது வருத்தம் அளிக்கிறது என்றும் உங்களுக்கு எதிராக விளையாடுவதை நான் எப்போதும் விரும்புகிறேன் என்றும் தெரிவித்து இருந்தேன். நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் எதிர்த்து விளையாடுவதை விரும்பினோம். ஏனெனில் களத்தில் இருவரது மனநிலையும் ஒரே மாதிரியாக இருந்தது’ என்றார்.

‘விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எனக்கு தெரியாது. ஆனால் இருவரும் இந்திய அணிக்காக நீண்ட காலமாக பெரிய பங்களிப்பை அளித்துள்ளனர். தற்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகச்சிறப்பாகவே உள்ளது. அவர்களில் பலர் நன்றாக விளையாடி வருகின்றனர். நல்ல திறமையுடன் இருக்கின்றனர். அவர்கள் இருவரின் இடத்தை புதிதாக வரும் வீரர்கள் நிரப்புவார்கள் என்று நம்புகிறேன். இந்திய அணியில் மிகச் சிறந்த திறமையான வீரர்கள் உள்ளனர். எனவே இந்த தொடர் மிகவும் சவாலாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.