மதுரை: திருப்பரங்குன்றம் மலை பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலுக்கு சென்று நிர்வாகிகளை சந்தித்தார். மேலும், மலைக்கு செல்லும் வழியில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றத்தில் இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதாரர்களாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லை. இந்துக்கள், இஸ்லாமியர்கள் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சில மதவாத அமைப்புகள் இதில் தலையிட்டு, இரு சமூகத்தினருக்கிடையே பகையை வளர்க்க முயற்சிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இப்பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இங்கு வந்தேன். மதவாத சக்திகள் இப்பிரச்சினையை பெரிதாக்கக் கூடாது. தமிழகத்தில் இதை வைத்து, மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திடக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.