“அவமானம் அல்ல… அதிகாரம் அளிப்பதே ஆங்கிலம்!” – அமித் ஷாவுக்கு ராகுல் காந்தி பதிலடி

புதுடெல்லி: இன்றைய உலகில் தாய்மொழியைப் போலவே ஆங்கிலம் முக்கியமானது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

“நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பேசி இருந்தார். அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இந்தி மொழியில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஆங்கிலம் ஓர் அணை அல்ல, அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல, அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல, அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவி.

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜக – ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை. ஏனென்றால், நீங்கள் (ஏழைக் குழந்தைகள்) கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை. இன்றைய உலகில், ஆங்கிலம் உங்கள் தாய்மொழியைப் போலவே முக்கியமானது. ஏனெனில் அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும். இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சம வாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்” என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆசுதோஷ் அக்னிஹோத்ரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய அமித் ஷா, “இந்தியாவின் அடையாளத்துக்கு தாய்மொழிகள் முக்கியமானவை. வெளிநாட்டு மொழிகளை விட அவை முன்னுரிமை பெற வேண்டும். இந்த நாட்டில், ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள். அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லை.

நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள் என்று நான் நம்புகிறேன். நமது மொழிகள் இல்லாவிட்டால் நாம் இந்தியர்களாக இருக்க முடியாது. வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாது. இந்தியாவின் மொழி பாரம்பரியத்தை மீட்டெடுக்க நாடு முழுவதும் புது முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும். நமது நாடு, நமது கலாச்சாரம், நமது வரலாறு மற்றும் நமது மதத்தைப் புரிந்துகொள்ள, எந்த அந்நிய மொழியும் போதுமானதாக இருக்காது. அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது.

இந்தப் போர் எவ்வளவு கடினமானது என்பதை நான் முழுமையாக அறிவேன். ஆனால் இந்திய சமூகம் அதில் வெற்றி பெறும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். மீண்டும் ஒருமுறை, சுயமரியாதையுடன், நமது சொந்த மொழிகளில் நமது நாட்டை நடத்துவோம், சித்தாந்தம் செய்வோம், ஆராய்ச்சி செய்வோம், முடிவுகளை எடுப்போம், உலகையும் வழிநடத்துவோம். இதில் யாரும் சந்தேகப்படத் தேவையில்லை. 2047-ஆம் ஆண்டில் உலகின் உச்சியில் இருப்பதற்கு நமது மொழிகள் பெரிதும் பங்களிக்கும்.

நாடு இருளில் மூழ்கியிருந்தபோது, ​​நமது மதம், சுதந்திரம் மற்றும் கலாச்சாரத்தின் விளக்குகளை இலக்கியம் ஏற்றி வைத்தது. நமது மதம், கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை யாரெல்லாம் தொட முயன்றார்களோ அவர்களை ​​நமது சமூகம் எதிர்த்து நின்று தோற்கடித்தது. இலக்கியம் நமது சமூகத்தின் ஆன்மா. மாற்றம் ஒரு மக்கள் இயக்கமாக மாறும்போது, ​​அது ஒரு புரட்சியாக மாறுகிறது. இன்று, இந்த மாற்றத்தை நம் நாட்டில் காணலாம். மாற்றத்துக்கான நமது இந்த பயணம் 2047-ஆம் ஆண்டுக்குள் நமது நாட்டின் பெருமையை மீண்டும் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்” என்று பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.