திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக மத்திய மாநில அரசுகள் மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தி பிரசாரம் நடந்தது.
இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்குமார் மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.
அவர் பேசிய விஷயம் குறித்துத் தெரிந்து கொண்ட இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் கைகலப்பாக மாறியது. உடனே வந்த தாடிகொம்பு போலீசார் இரு தரப்பினரையும் தடுத்து நிறுத்தினர்.

கைகலப்பில் காயம் அடைந்த வினோத் மற்றும் சரத்குமார் இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த மோதலில் போலீசார் இந்து முன்னணிக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறி மார்க்சிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் – பெங்களூர் நான்கு வழிச்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அங்கு வந்த திண்டுக்கல் புறநகர் டிஎஸ்பி சிபின்சாய் சவுந்தர்யன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுக் கலைந்து போகச் செய்தார். திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., ஆர். சச்சிதானந்தம் நேரில் வந்து நடந்தவற்றைக் கேட்டறிந்தார்.
தாடிகொம்பு காவல் நிலையத்திலும் இரு தரப்பினரும் மாறி மாறி புகார் கொடுத்தனர். அதன் பிறகு இரு தரப்பினரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் சரத்தையும் பார்ப்பதற்குக் கூடினர்.
அப்போது இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் கோஷங்கள் முழங்கி தங்களது கண்டனத்தைத் தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கிடையே மீண்டும் வாக்குவாதங்கள் முற்றிக் கைகலப்பாக மாறியது.
அங்கு அடிதடி ரகளையில் ஈடுபட்டனர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகனைத் தடியால் தாக்கியதில் அவருக்கு மண்டை உடைப்பு ஏற்பட்டது.

இதில் காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதா கட்சியினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் திண்டுக்கல் அரசு மருத்துவமனை கல்லூரி முன்பாகப் போர்க்களம் போல் காட்சியளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரைக் கைது செய்து கலவர இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்.
மேலும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொழுது பாரதிய ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு வாக்குவாதங்கள் முற்றியது. இந்த களபேரங்களால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் பரபரப்பானது.