ஒட்டாவா
டெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர் உயர் படிப்புக்காக கனடா சென்றார். அங்குள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென இறந்து விட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் அவரது மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் உள்ளது.
மாணவி தன்யா தியாகி இறந்தது தொடர்பாக வான்கூரில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் டெல்லியில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தன்யாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
இது குறித்து கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறியதாவது;
கால்கேரி பல்கலையில் பயின்று வந்த இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் விதமாக, கனடா அதிகாரிகளுடனும், குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் டொமினிகன் குடியரசு நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளியான சுதிக்ஷா கோனன்கி, கடலில் குளிக்கச் சென்ற போது மாயமாகியது குறிப்பிடத்தக்கது. சமீப காலமாக வெளிநாடுகளில் இந்திய மாணவர்கள் மர்மமாக இறந்து வருவது அதிகரித்து வருகிறது.