Ravichandran Ashwin Controversy: குமரி மாவட்டம் அருவிக்கரையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் நண்பர்களோடு குளித்து மகிழும் படம் இன்ஸ்டாகிராமில் வெளியாகியிருந்தது. இந்த புகைப்படங்கள்தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள அருவிக்கரையில் பரளியாறு ஓடுகிறது. அருவிக்கரையில் பாறைக்கூட்டத்தின் மீது பரளியாற்று தண்ணீர் பாய்ந்தோடும் அழகு, அனைவரின் மனதையும் கொள்ளை கொள்ளும் ஒன்று என்றே கூறலாம்.
Ravichandran Ashwin: கன்னியாகுமரி வந்த அஸ்வின்
இந்த பகுதியில்தான் ‘நீ வருவாய் என’, ‘ராமன் தேடிய சீதை’, ‘வருஷம் 16’ உட்பட ஏராளமான தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது. ரம்மியான இந்த இடத்தின் பெருமை தற்போதைய சமூக வலைதள யுகத்தில் திக்கெட்டும் பரவியிருக்கிறது. தினமும் யூ-ட்யூப், பேஸ்புக், இன்ஸ்டா பிரபலங்கள் இப்பகுதிக்கு அதிகம் வருகை தருகின்றனர். மக்களும் ஆர்வமாக இங்கு வருகின்றனர் என்பதால் அருவிக்கரைக்கு வருகை தருவோரின் எண்ணிக்கையும் முன்பைவிட பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 19) முன்னாள் பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது சக வீரர்களுடன் ஆரல்வாய்மொழி வழியாக அருவிக்கரைக்கு வந்துள்ளார். அப்போது அங்குள்ள பாறக்கூட்டத்தினூடே பாய்ந்தோடும் பரளியாற்றில் நண்பர்களுடன் குளித்து மகிழ்ந்துள்ளார்.
Ravichandran Ashwin: அஸ்வின் போட்ட படங்களால் சர்ச்சை
மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அருவிக்கரையில் அஸ்வின் வந்துள்ளார் என்பதை இன்ஸ்டாகிராமில் பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் குதூகலமடைந்து அந்த படங்களுக்கும் வீடியோகளுக்கும் லைக்கையும், கமெண்டையும் அள்ளித்தெளித்து வருகின்றனர்.
View this post on Instagram
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக பரளியாற்றில் வெள்ளம் சற்று அதிகரித்த விதமாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஸ்வின் குளித்து வீடியோ வெளியிட்ட பகுதி சற்று ஆபத்தான பகுதி ஆகும். உள்ளூர் ஆட்களே அதிகமாக இங்கே குளிக்கச் செல்லமாட்டார்கள். அஸ்வினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த படங்களை பார்த்து விட்டு, இங்கே குளிக்க இறங்கி ஆபத்தில் மற்ற சுற்றுலா பயணிகள் சிக்கிவிடக்க்கூடாது என கருத்துகள் வெளியாகி உள்ளன. மேலும் இப்பகுதியில் குளிக்க தடை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அஸ்வினை சுற்றி சர்ச்சை எழுந்துள்ளது.
Ravichandran Ashwin: திண்டுக்கல் டிராக்ஸ் அணியுடன் சுற்றுலா
தற்போது டி20 லீக் தொடரான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி (TNPL 2025) ஜூன் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதலிரண்டு கட்டங்களாக கோயம்புத்தூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில், மூன்றாவது கட்டமாக இன்று முதல் வரும் ஜூன் 26ஆம் தேதிவரை திருநெல்வேலியில் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்கு பின் ஜூன் 28, ஜூன் 29 தேதிகளில் லீக் சுற்று போட்டிகளும், ஜூலை 1 முதல் ஜூலை 6 வரையில் பிளே ஆப் சுற்று போட்டிகளும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறுகின்றன.
அந்த வகையில், திருநெல்வேலியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க ரவிசந்திரன் அஸ்வின் வருகை தந்துள்ளார். அவர் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில், தொடர் போட்டிகளுக்கு நடுவே சிறிய இளைப்பாறுதலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறுக்கு சக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவுடன் சுற்றுலா சென்றிருக்கிறார். தடைசெய்யப்பட்ட பகுதியில் குளித்ததால் தற்போது சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
Ravichandran Ashwin: பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டு என்ன ஆனது?
முன்னதாக டிஎன்பிஎல் தொடரில் திருப்பூர் அணிக்கு எதிரான போட்டியில் நடுவரோடு வாக்குவதத்தில் ஈடுபட்டது, கையுறையை கழட்டி வீசியது போன்ற செயல்களுக்காக அவரது போட்டித் தொகையில் இருந்து 30% அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து மதுரை அணிக்கு எதிரான போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை சேதப்படுத்தியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதையடுத்து, கிரிக்கெட்டின் பரந்த நலனுக்காகவும், தொடரை சீராக நடத்துவதற்காகவும் மதுரை அணி நிர்வாகமும் பயிற்சியாளர்களும் புகாரை வாபஸ் பெற முடிவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.