Israel Iran Conflict: இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போர் உச்சத்தில் உள்ளது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தீவிரமாக தாக்கி வருகின்றன. இதில் தொழில்நுட்பமும் மேம்பட்ட ஆயுதங்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இஸ்ரேலில் உள்ள தனியார் பாதுகாப்பு கேமராக்களை ஈரான் ஹேக் செய்து வருவதாக சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் சமீபத்தில் தெரிவித்து வருகின்றனர். எதிரி குறித்த நிகழ்நேர தகவல்களை சேகரிப்பதே இதன் நோக்கமாக உள்ளது.
No Security Cameras: மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த இஸ்ரேல்
டெல் அவிவில் உள்ள உயரமான கட்டிடங்களை ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கிய பிறகு, இஸ்ரேல் தேசிய சைபர் இயக்குநரகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜெனரல் ரஃபேல் பிராங்கோ இந்த வாரம் பொது வானொலியில் ஒரு எச்சரிக்கையை விடுத்ததாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சைபர் பாதுகாப்பு நிறுவனமான கோட் ப்ளூவை வழிநடத்தும் பிராங்கோ, “உங்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை நிறுத்தி வடுங்கள், அல்லது, கடவுச்சொல்லை மாற்றிவிடுங்கள். கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக, ஏவுகணை தாக்குதல் தளங்களை மதிப்பிடுவதற்கும் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் ஈரானிய அமைப்புகளை நம் கேமராக்களுடன் இணைக்க ஈரான் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
போர் திட்டமிடலுக்காக இணையத்துடன் இணைக்கப்பட்ட கேமராக்களை குறிவைத்து ஈரான் சைபர் தாக்குதல்களை அதிகரித்து வருவதாக இஸ்ரேல் தேசிய சைபர் இயக்குநரகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக திங்களன்று ஒரு செய்தித் தொடர்பாளர், “போரின் போது இதுபோன்ற முயற்சிகளை நாங்கள் கண்டிருக்கிறோம், இப்போது அந்த முயற்சிகள் மீண்டும் செய்யப்படுகின்றன.” என்று கூறினார். ஏவுகணைத் தாக்குதல்களின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வந்தாலும், இஸ்ரேலிய அதிகாரிகள் அத்தகைய படங்களைக் காட்டுவதைத் தடை செய்துள்ளனர்.
கேமரா உத்தி இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளது
பாதுகாப்பு கேமராக்களை வேவு பார்க்கும் இந்த முறை புதியதல்ல. சமீபத்தில் இஸ்ரேல் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குநர் பதவியை ராஜினாமா செய்த காபி போர்ட்னாய், அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்கு முன்பே ஹமாஸ் தனியார் கேமராக்களை தனது நன்மைக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறினார். “காசாவைச் சுற்றியுள்ள தனியார் கேமராக்களிலிருந்து உளவு தகவல்களை சேகரித்தது பெரிய குழப்பத்தை உண்டாக்கியது” என்று போர்ட்னாய் ஒரு நேர்காணலில் கூறினார். மேலும், “ஆயிரக்கணக்கான பொது மற்றும் தனியார் கேமராக்கள் பல ஆண்டுகளாக தகவல்களைச் சேகரிக்க ஹேக் செய்யப்பட்டன” என்றும் அவர் தெரிவித்தார்.
உக்ரைனில் தடைசெய்யப்பட்ட கேமராக்கள்
இந்தப் பிரச்சினை இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மட்டுமானதல்ல. உக்ரைனில், எல்லைச் சோதனைச் சாவடிகள், இராணுவ தளங்கள் மற்றும் ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள தனியார் கேமராக்களை ரஷ்யா இதேபோல் மக்கள், வாகனங்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்தைக் கண்காணிக்கப் பயன்படுத்தியுள்ளது என்று மே மாதம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்தன. வான்வழித் தாக்குதல்களைத் திட்டமிட ரஷ்யா கண்காணிப்பு கேமராக்களைப் பயன்படுத்துவதாக எச்சரிக்கப்பட்ட பின்னர், 2022 இல் உக்ரைன் கண்காணிப்பு கேமராக்களை தடை செய்தது. 2023 ஆம் ஆண்டில், உடனடி ஏவுகணைத் தாக்குதலைத் தடுக்க தெருக்களில் உள்ள வெப்கேமராக்களின் உரிமையாளர்களை ஆன்லைனில் ஒளிபரப்புவதை நிறுத்துமாறு அது வலியுறுத்தியது.
சீன கேமராக்களை அமெரிக்கா தடை செய்தது
தேசிய பாதுகாப்பு கவலைகள் காரணமாக அமெரிக்காவில் உள்ள பெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் 2022 ஆம் ஆண்டில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கண்காணிப்பு உபகரணங்களைத் தடை செய்தது குறிப்பிட்டத்தக்கது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான சைபர் போரும் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவான ஹேக்கிங் குழுவான பிரிடேட்டரி ஸ்பாரோ (Predatory Sparrow) ஒரு பெரிய ஈரானிய வங்கி மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தை முடக்கியதற்கு பொறுப்பேற்றுள்ளது. ஈரானின் அரசு நடத்தும் ஐஆர்ஐபி நியூஸ் (IRIB News), நாட்டின் முக்கியமான இடங்களில் இஸ்ரேல் பெரிய சைபர் தாக்குதலை நடத்தியதாக செய்தி வெளியிட்டுள்ளது.
நிலத்தில் நேருக்கு நேர் மோதல், கடலில் போர், வான்வழித்தாக்குதல் அனைத்தையும் கண்ட உலகம் இப்போது தொழில்நுட்ப ரீதியாக நடக்கும் போரையும் பார்த்து வருகிறது. வீடியோ கேம் விளையாடப்படுவது போல, மானிடரில் இலக்கை பார்த்து நிஜத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.