லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோண்டா பகுதியை சேர்ந்தவர் ஹரிஸ் சந்திரா (வயது 42). கூலித்தொழிலாளியாக உள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த கரீஷ்மா (36) என்பவருடன் இவருக்கு திருமணம் ஆனது.
இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக கரீஷ்மாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டதை ஹரிஸ் சந்திரா உணர்ந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் சம்பவத்தன்று காலை ஹரிஸ் சந்திரா வேலைக்காக வெளியே செல்வதாக கூறி வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறி அங்கேயே மறைந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கரீஷ்மா வீட்டில் தனிமையில் இருந்து உள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவராஜ் என்பவர் கரீஷ்மாவின் வீட்டிற்குள் நுழைந்தார். இருவரும் உல்லாசமாக இருந்ததை ஹரிஸ் சந்திரா பார்த்து மனவேதனை அடைந்தார். அப்போது கரீஷ்மா தனது காதலனுடன் சேர்ந்து ஹரிஸ் சந்திராவுக்கு சோற்றில் விஷம் வைத்து கொல்ல முடிவு செய்தார். இதை அறிந்து கொண்ட ஹரிஸ் சந்திரா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
பின்னர் அன்றிரவு வேலை முடிந்து வீட்டுக்கு வருவதுபோல ஹரிஸ் சந்திரா வந்தார். கரீஷ்மா சமைத்து வைத்திருந்த இரவு உணவை அவருக்கு பரிமாறினார். அதில் விஷம் கலந்திருப்பதை உணர்ந்த ஹரிஸ் சந்திரா தட்டை வீசி எறிந்தார். அடுத்தநாள் ஊர் பஞ்சாயத்தை கூட்டி நடந்ததை பெரியவர்களிடம் விவரித்தார்.
இதனையடுத்து தனது மனைவியை சிவராஜுக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால் கரீஷ்மா தரப்பில் இந்த திருமணம் கட்டாயத்தின்பேரில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கரீஷ்மா தனது மகளுடன் சென்றநிலையில் ஹரிஸ் சந்திரா அவரை பிரிந்து 2 மகன்களுடன் வீடு திரும்பினார்.