“இனியும் உடன்படவில்லை எனில்…” – ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை விவரித்த ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன்: “ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ளவில்லை எனில், ஈரான் மீது அடுத்தடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7.30 (இந்திய நேரப்படி) மணி அளவில் நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது, “ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழிப்பதும், அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும்தான் அமெரிக்காவின் முதல் நோக்கம். அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி நிலையங்கள் அழிக்கப்பட்டன. ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.

மத்திய கிழக்கு பகுதியின் கொடுங்கோல் நாடான ஈரான் இப்போது அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ள வேண்டும். இல்லையே அடுத்தடுத்த தாக்குதல் மிக பெரியதாகவும், மிக எளிதாகவும் இருக்கும் என எச்சரிக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் ஈரான் பேசி வருகிறது. வெடிகுண்டுகள் மூலம் நம் மக்களின் உயிரை அவர்கள் பறிக்கின்றனர். அப்படி லட்சக்கணக்கானவர்களை நாம் இழந்துள்ளோம். பல பேரை கொன்றவர் ஜெனரல் காசிம் சுலைமானி என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடரக் கூடாது என பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முடிவு செய்தேன்.

அதனால்தான் சொல்கிறேன். இனி இது தொடரக்கூடாது. ஒன்று ஈரானில் அமைதி ஏற்பட வேண்டும். அல்லது அங்கு மோசமான பாதிப்புகள் ஏற்படும். இந்த பாதிப்பின் தாக்கம் கடந்த 8 நாட்களாக ஈரான் சந்தித்து வரும் நிலையை காட்டிலும் மோசமாக இருக்கும். அங்கு தாக்குதல் நடத்துவதற்கான நமக்கு ஏராளமான இலக்குகள் உள்ளன. அமைதி ஏற்படவில்லை என்றால், அந்த இலக்குகளை துல்லியமாக, துரிதமாக, திறம்பட தாக்குவோம்.

இந்த நேரத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு அணியாக இணைந்து செயல்பட்டோம். இதற்கு முன்பு யாரும் இப்படி இணைந்து செயல்பட்டது கிடையாது. இஸ்ரேல் ராணுவத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது மாதிரியான வெற்றிகர ராணுவ நடவடிக்கையை உலகம் கண்டதில்லை. அதை செய்து காட்டிய அமெரிக்க படையினருக்கு வாழ்த்துகள். இது மாதிரியான ராணுவ நடவடிக்கையை உலகில் வேறு எந்த நாடும் மேற்கொண்டது இல்லை. அப்படியொரு தாக்குதலை நாம் நடத்தியுள்ளோம். நான் அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். கடவுளுக்கு நன்றி. கடவுளே நாங்கள் உங்களை நேசிக்கிறோம். எங்கள் மிகப் பெரிய ராணுவத்தை நேசிக்கிறோம். அவர்களை காக்கவும். கடவுள் மத்திய கிழக்கு, இஸ்ரேல், அமெரிக்காவை ஆசீர்வதிப்பார். நன்றி” என்றார்.

ட்ரம்ப்பின் சமூக வலைதள பதிவு: முன்னதாக, ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் பகிர்ந்த தகவல்: “ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் உள்ளிட்ட மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம். இப்போது அனைத்து விமானங்களும் ஈரானின் வான்வெளிக்கு வெளியே உள்ளன. முதன்மை தளமான ஃபோர்டோவில் குண்டுகள் முழுமையாக வீசப்பட்டன. அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக வீடு திரும்புகின்றன. எங்கள் சிறந்த அமெரிக்க வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதைச் செய்திருக்க முடியாது. இப்போது அமைதிக்கான நேரம். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி” என அவர் பதிவிட்டிருந்தார்.

இந்தத் தாக்குதல்களை நடத்த 2பி2 பாம்பர் ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா இந்த குண்டுகளை பயன்படுத்துவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. முன்னதாக, ஈரானின் இஸ்பஹான் அணுசக்தி தளம் மீது இஸ்ரேல் விமானப் படை நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்களின் தாக்குதலில் ஈரானின் 3 ராணுவ தளபதிகள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, டான் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், ஈரான் இடையே இன்று 10-வது நாளாக போர் நீடிக்கிறது. ஆரம்பம் முதலே ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்படி நேற்று ஈரானின் இஸ்பஹான் அணுசக்தி தளத்தை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தின. இதில் அந்த அணுசக்தி தளம் மிகக் கடுமையாக சேதமடைந்தது என்று குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லை ஈரான் தரப்பு கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.