India National Cricket Team: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy) கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. லீட்ஸ் நகரின் ஹெடிங்லி நகரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான நிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் சரி பாதியாக வெற்றி வாய்ப்பு இருக்கிறது எனலாம்.
ENG vs IND: இந்தியா 471 ரன்கள் குவிப்பு
டாஸை இழந்த இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101, ரிஷப் பண்ட் 134, சுப்மான் கில் 147 ரன்களை அடிக்க இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஷ் டங்க் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஷோயப் பஷீர் மற்றும் பிரைடன் கார்ஸ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
ENG vs IND: பும்ராவின் அதிரடி
தொடர்ந்து இரண்டாம் நாளான நேற்று இரண்டாவது செஷனில் இருந்து இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. முதல் ஓவரிலேயே ஜாக் கிராலி 4 ரன்களில் பும்ராவிடம் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் – ஒல்லி போப் ஜோடி 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. பென் டக்கெட் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ரூட் உடன் ஒல்லி போப் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 80 ரன்களை அடித்தபோது ரூட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டையும் பும்ராவே எடுத்தார். தொடர்ந்து போப் சதம் அடித்தார்.
இதற்கிடையில் பென் டக்கெட் முன்னர் கொடுத்த கேட்சை ஜடேஜாவும், போப் கொடுத்த கேட்சை ஜெய்ஸ்வாலும் கோட்டை விட்டனர். இந்த இரண்டு வாய்ப்புகளையும் உருவாக்கிக் கொடுத்தவர் பும்ராதான். அதுமட்டுமின்றி, நேற்று இறுதிக் கட்ட ஓவர்களில் ஹாரி ப்ரூக்கிற்கு பந்துவீசிய பும்ரா அவரது விக்கெட்டையும் எடுத்தார். ஆனால் அந்த பந்து துரதிருஷ்டவசமாக நோ-பால் என அறிவிக்கப்பட்டது. பும்ராவின் இந்த 3 வாய்ப்புகளும் தவறவிடப்படாமல் இருந்தால் இங்கிலாந்தின் நிலைமையே வேறு.
ENG vs IND: சொதப்பிய மற்ற பௌலர்கள்
தற்போது 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 209 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. ஒல்லி போப் 100, ப்ரூக் 0 என்ற நிலையில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இங்கிலாந்து 262 ரன்கள் பின்தங்கி உள்ளது. பும்ரா மட்டுமே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார், விக்கெட் வாய்ப்பையும் ஏற்படுத்தினார். பும்ராவை (Jasprit Bumrah) தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களுமே சுமாராகவே வீசினர். அவர்களால் விக்கெட் எடுக்கவே முடியவில்லை.
சிராஜ் 14 ஓவர்களை வீசி 50 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 10 ஓவர்களை வீசி 56 ரன்களை கொடுத்தனர். ஜடேஜா கட்டுக்கோப்பாக வீசி 9 ஓவர்களில் 25 ரன்களை கொடுத்தார். அவரும் பும்ராவும் மட்டுமே தலா 2 மெய்டன் ஓவர்களை வீசியிருக்கின்றனர். மறுபுறம் 8வது இடத்தில் பேட்டிங்கிற்காகவும், வேகப்பந்துவீச்சுக்காவும் பிளேயிங் லெவனில் இடம்பெற்ற ஷர்துல் தாக்கூர் (Shardul Thakur) 3 ஓவர்களை மட்டும் வீசி 23 ரன்களை கொடுத்திருந்தார்.
ENG vs IND: டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முக்கியம்
டெஸ்ட் போட்டியின் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் கைப்பற்றுவது அவசியம். அதில் தவறினால் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் வெற்றியை கோட்டைவிட வேண்டியதுவரும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இது முக்கியம். அப்படியிருக்க பும்ராவை தவிர வேறு யாரும் பெரியளவில் அந்த விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்துகளை வீசவில்லை. சிராஜ் மட்டுமே ஜோ ரூட்டை சற்று நெருக்கடியில் உள்ளாக்கினார்.
ENG vs IND: இந்திய அணியின் மேஜர் தவறு
இந்த சூழலில், ஷர்துல் தாக்கூருக்கு பதில் குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் எடுத்திருந்தால் நிச்சயம் தற்போதைய சூழலில் போட்டி இந்திய அணியின் பக்கமே இருந்திருக்கும். பும்ராவும், குல்தீப்பும் அடுத்தடுத்து ஓவர்களை வீசினால் இருமுனைகளிலும் நெருக்கடி உண்டாகும். இதனால் பேட்டர்கள் தவறுகளை அதிகம் செய்வார்கள், நீங்கள் விக்கெட்டுகளை அறுவடை செய்யலாம். குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) மணிக்கட்டு சுழற்பந்துவீச்சாளர் என்பதால் அவரால் இந்த ஆடுகளத்திலும் பந்தை திருப்ப முடியும்.
ENG vs IND: அன்றே சொன்ன அஸ்வின்
இங்கிலாந்து பேட்டர்கள் குல்தீப் யாதவிற்கு கடந்த காலங்களில் திணறியிருக்கின்றனர். தற்போது முதல் இன்னிங்ஸில் மட்டுமின்றி இரண்டாவது இன்னிங்ஸிலும் பெரியளவுக்கு கைக்கொடுக்கும். இதைதான், முன்னாள் இந்திய வீரர் அஸ்வினும் அவரது யூ-ட்யூப் சேனலில் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் கூறியிருந்தார். ஆடுகளத்தில் அதிக புற்கள் இருந்தால் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் குல்தீப் யாதவை விளையாட வைக்கலாம் என அஸ்வின் கூறியிருந்தார். இந்திய அணி 8வது இடத்தில் பேட்டர் விளையாட வேண்டும் என்பதற்காக குல்தீப் யாதவை அமரவைப்பதும் சரியாக இருக்காது.