கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் ஆயிரம் இருநூறு நாட்களைத் தாண்டி நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது.
இதனிடையே, கடந்த 1ம் தேதி உக்ரைன் நடத்திய தாக்குதலில் ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டன. இதனால், இரு தரப்பு மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் மீது மீது ரஷியா இன்று மிகப்பெரிய தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கீவ் ராணுவ நிர்வாகத்தின் தலைவர் டைமூர் தக்காசென்கோ வெளியிட்ட அறிக்கையில், “தலைநகரின் மீது மற்றொரு பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எதிரி டிரோன்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். ஆபத்து நீங்கும் வரை தங்குமிடங்களில் பத்திரமாக இருங்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.