லாசானே,
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐ.ஓ.சி.) தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றிய ஜெர்மனியைச் சேர்ந்த தாமஸ் பாச் விலகியதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் நீச்சல் வீராங்கனையான (ஜிம்பாப்வே) கிறிஸ்டி கவன்ட்ரி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
131 ஆண்டுகால ஒலிம்பிக் கமிட்டி வரலாற்றில், சர்வதேச விளையாட்டு அமைப்பில் அதிகாரமிக்க இந்த அரியணையில் அமரும் முதல் பெண் மற்றும் முதல் ஆப்பிரிக்க நாட்டவர் என்ற மகத்தான பெருமையை 41 வயதான கவன்ட்ரி பெற்றார்.
இந்த நிலையில் ஐ.ஓ.சி. அமைப்பு உருவாக்கப்பட்ட தினமான நேற்று, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக கவுன்ட்ரி முறைப்படி பொறுப்பு ஏற்றுக் கொண்டார். சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நடந்த விழாவில் கோல்டன் சாவியை முன்னாள் தலைவர் தாமஸ் பாச் அவரிடம் வழங்கினார். ஐ.ஓ.சி. சிறந்தவரின் கைக்கு சென்று இருப்பதாகவும், அவர் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் செயல்படுவார் என்றும் தாமஸ் பாச் கூறினார்.