இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் டி20 உலக கோப்பையை வென்ற பிறகு அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். அதனை தொடர்ந்து கவுதம் கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். பாஜக சார்பில் எம்பியாக இருந்த கவுதம் கம்பீர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனை தொடர்ந்து அவருக்கு தலைமை பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டது. ஐபிஎல்லில் லக்னோ அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதும் பல்வேறு அதிரடி மாற்றங்கள் அணியில் ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியாவிடமிருந்து டி20 கேப்டன்ஷிப் சூர்யகுமார் யாதவிற்கு வழங்கப்பட்டது.
கம்பீரின் இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து கவுதம் கம்பீர் தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது,இருப்பினும் தோல்வியே அதிகம் கிடைத்தது. கவுதம் கம்பீர் தலைமையில் 27 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் ஒரு நாள் தொடரை இந்தியா இழந்தது. அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் இழந்தது. பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தோல்வியை சந்தித்தது இந்திய அணி. இதன் காரணமாக கடந்த இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய அணி, இந்த முறை அதனை தவறவிட்டது.
இதன் காரணமாக கவுதம் கம்பீர் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தன. அவரை மாற்ற வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பி வந்தனர். கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளர் ஆனதும் பல வீரர்கள் ஓய்வை அறிவிக்க தொடங்கியுள்ளனர். அஸ்வின் ஆஸ்திரேலியா தொடரின் இடையிலேயே ஓய்வை அறிவித்து வெளியேறினார். தற்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இருப்பினும் கவுதம் கம்பீர் தலைமையில் தான் சமீபத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது.
சவுரவ் கங்குலி தலைமை பயிற்சியாளராக விருப்பம்
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். “இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் ஆவது பற்றி நான் அதிகம் யோசித்தது இல்லை. ஏனெனில் பிசிசிஐயில் நான் நிறைய பொறுப்புகளில் இருந்துள்ளேன். 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பிசிசிஐ தலைவராக பெற்றுப்பெற்றேன். அடுத்தடுத்து என்ன பொறுப்புகளில் இருக்கலாம் என்பது பற்றி நான் யோசித்ததில்லை. எனக்கு 50 வயது மட்டுமே ஆகிறது. எனவே இந்திய கிரிக்கெட்டிற்காக எந்த பொறுப்புகளிலும் இருக்க தயாராக உள்ளேன்.
தற்போது தலைமை பயிற்சியாளர் ஆவதற்கும் நான் தயாராக இருக்கிறேன். தலைமை பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் சற்று மெதுவாகவே செல்கிறார். நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என தொடர் தோல்விகளை சந்தித்துள்ளார், அவரது பயிற்சி பற்றி எனக்கு தெரியாது. ஏனெனில் ஒரு பயிற்சியாளராக அவருடன் நான் வேலை செய்ததில்லை. தற்போதைய இங்கிலாந்து தொடர் அவருக்கு மிகவும் முக்கியமான ஒன்று, அதிகம் சவால் நிறைந்ததும் கூட. தன்னுடைய தவறுகளை திருத்திக் கொண்டு அவர் முன்னேறுவார் என்று எதிர்பார்க்கிறேன். அவருக்கு வாழ்த்துக்கள்” என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும் படிங்க: ஒரே போட்டியில் ரிஷப் பண்ட் செய்த எக்கச்சக்க சாதனைகள்… உண்மையிலேயே ஸ்பைடர் மேன் தான்!