சென்னை,
தமிழ்நாடு ஆக்கி சங்கம் சார்பில் முதலாவது தேசிய மாஸ்டர்ஸ் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 8-2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப்பை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
தமிழக அணி தரப்பில் முத்துசெல்வன் 4 கோலும், கேப்டன் ஆடம் சின்கிளைர், சுதர்சன், ரமேஷ், வினோத் குமார் தலா ஒரு கோலும் அடித்தனர். மற்றொரு காலிறுதியில் ஒடிசா அணி 6-2 என்ற கோல் ஆந்திராவை வீழ்த்தி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.
மகளிர் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஒடிசா அணி 3-2 என்ற கோல் கணக்கில் அரியானாவை வீழ்த்தியது. பஞ்சாப் அணி 3-0 என்ற கோல் கணக்கில் தமிழகத்தை தோற்கடித்தது. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் கர்நாடகா, இமாசலபிரதேசம், கேரளா, மராட்டியமும், ‘பி’ பிரிவில் பஞ்சாப், ஒடிசா, அரியானா, தமிழ்நாடும் முறையே முதல் 4 இடங்களுடன் காலிறுதிக்குள் நுழைந்தன.
இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு காலிறுதி ஆட்டங்களில் மராட்டியம்-கர்நாடகம் (காலை 10 மணி), அரியானா-சண்டிகார் (பகல் 12 மணி) அணிகள் மோதுகின்றன. மகளிர் பிரிவில் நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் கர்நாடகா-தமிழ்நாடு (காலை 6 மணி), ஒடிசா -கேரளா (காலை 8 மணி), இமாசல பிரதேசம்- அரியானா (பிற்பகல் 2 மணி), பஞ்சாப்- மராட்டியம் (மாலை 4 மணி) அணிகள் மோதுகின்றன.