நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம்! – மகளுக்கு அம்மாவின் மடல் | #உறவின்கடிதம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

என் அன்பு மகளே !

உன் தாயின் உணர்வு பூர்வமான கடிதம் இது. உன்னை பெற்றெடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னை பார்த்ததும் என் இதயம் நிறைய அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. உன்னிடம் நீண்ட நாட்களாக என் ஆழ்மனதில் ஒளித்து வைத்திருந்த ரகசியத்தையும், மன குமுறல்களையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்த இது நல்ல சந்தர்ப்பமாக அமைகிறது. நீ பெரியவளாகி இந்த கடிதத்தை படிக்கும் போது நெகிழ்ந்து விடுவாய் என நம்புகிறேன்.

ஆம் எனக்கும், உன் தந்தைக்கும் திருமணமாகி இன்றுடன் 7 வருடங்கள் ஆகிறது. திருமணமான புதிதில் எங்களுக்குள் பலபுரிதல்களோடு இன்புற்று வாழ்க்கை பயணத்தை தொடங்கினோம். நாட்கள் செல்ல செல்ல எங்கள் மனதில் ஏதோ இனம்புரியாத பயம் எழுந்தது. 

அது குழந்தை பாக்கியம். ஒவ்வொரு மாதமும் உன்னுடைய வருகையை எண்ணி எண்ணி காத்துக் கொண்டிருந்த நாட்களே அதிகம். மாதங்கள் ஓரிரு நாட்கள் தள்ளிவிட, ஒருவேளை என்னுள் நீ உதித்திருப்பாயோ ? என எண்ணி கர்ப்ப பரிசோதனை மேற்கொண்டு பின் நான் ஒவ்வொரு மாதமும் துவண்டு போன நாட்கள் அதிகம். அப்போது என் கண்களில்  வழிந்தோடும் கண்ணீருக்கு அளவே இருக்காது. இருப்பினும், மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. 

இல்லை ! இல்லை ! என்றாவது ஒரு நாள் உன்னை பெற்றெடுப்பேன் என மன ஆறுதல் கொண்டு அடுத்த வேலையை துவங்குவேன். திருமணம், வளைக்காப்பு போன்ற நிகழ்ச்சி கூட்டங்களில் கலந்து கொள்வதை பல வருடங்களாக தவிர்த்து வந்தேன். இருந்த போதிலும் சிலர் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவே பேசதான் செய்தார்கள், இருப்பினும் நானும், உன் தந்தையும் மனம் தளரவில்லை. என்றாவது ஒரு நாள் நான் தாய்மை அடைவேன் என்ற நம்பிக்கையில் காலங்களை கடத்தினேன். பல கோயில்களிலும், மருத்துவமனைகளிலும் வரிசையில் காத்து கொண்டிருந்தோம். எதுவும் பயன் அளிக்கவில்லை. பின் விரக்திக்கே சென்றேன்.

நான் என்ன பாவம் செய்தேன் !  எனக்கு ஏன் இந்த தண்டனை என கடவுளிடம் பலமுறை மண்டியிட்டு அழுதிருக்கிறேன். நாங்கள் பணமோ, நகையோ, அந்தஸ்தையோ கேட்க வில்லையே, கொஞ்சி விளையாடவும், வீட்டிற்கு சென்றால் எங்கள் வருகையை மகிழ்ச்சியுடன் வரவேற்கவோ தான  குழந்தையை கேட்கிறோம். எத்தனையோ பெற்றோர்கள் குழந்தைகளை கருகலைப்பு செய்யும் போதெல்லாம் நான் கடவுளின் மீது கோபத்தை கக்கியிருக்கிறேன். கடவுள் கல் நெஞ்சம் கொண்டவன் என்று. 

என் கண்கள் நாட்களை எண்ணி பூத்துப்போனது. எப்படியோ 5 வருடங்கள் கடந்து விட்டது. 6 வது வருடம் தொடங்கியபின் நானும், உன் தந்தையும். மனம் வெறித்து சொந்த பந்தத்தையும், உற்றார் உறவினர்களையும் தவிர்க்க தொடங்கினோம். செல்லும் இடமெல்லாம் குழந்தை பற்றிய கேள்விதான். ஒரு நாள் மதியம், புத்தகம் படித்து கொண்டிருந்தேன். திடீரென தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. உன் தந்தையிடம் கூறினேன். அவர் என்னை மருத்துமனைக்கு அழைத்துச் சென்றார். 

என்னை பரிசோதித்த மருத்துவர் உன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள் என்றனர். அன்று, நாங்கள் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்து போனோம். இது கனவா இல்லை நிஜமா என சிறிது நேரம் வரை புரியவில்லை. ஆம் ! நீ என்னுள் வந்துவிட்டாய் அன்பு மகளே..  அதுவும் ஒருவளாக இல்லை, இரட்டையராக!! (ஆம் நீயும் உன் தம்பியும் இரட்டையர்கள்). 

ஒரு குழந்தையை கேட்ட எனக்கு, கடவுள் வரப்பிரசாதமாக இரட்டை குழந்தையை பரிசளித்து விட்டார் என பூரிப்பில் கொண்டாடினேன். உன்னை முதன் முதலில் ஸ்கேனில் பார்த்த நொடி ஒருபொழுதும் மறக்க முடியாது. நான் பலமுறை மருத்துவரிடம் கேட்டேன். நான் உண்மையாகவே கருவுற்றிருக்கேனா? என்று ஆச்சரியத்துடன்.

மருத்துவரோ சிரித்தபடி உங்கள் இருவரையும் ஸ்கேனில் காட்டினார். அன்று நான் அடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நீங்கள் இருவரும் சேட்டை மிகுந்த குழந்தைகள். ஒவ்வொரு நாளும் நீங்கள் பிஞ்சு, கால்களால் உதைக்கும் போது, என் வலிகளும், நான் கண்ட அவமானங்களும் பறந்து ஒடின. இரட்டை குழந்தைகளா? என சொந்த பந்தங்கள் வாய் அடைத்து போயினர்.

ஒவ்வொரு நாளும் உன் தந்தை நல்ல பண்புகளையும், தலைவர்களின் வாழ்க்கை நெறிகளையும் போதிப்பார். அதனை கேட்டு வயிற்றினுள் அசைத்து எங்களை நெகிழச் செய்வீர்கள். வளைகாப்பு தேதி குறித்து விட உற்றார் உறவினர்கள் வருகை தரும் நேரத்தில் யார் கண்கள் உங்கள் மீது பட்டதோ தெரியவில்லை. பனிக்குடநீர் திடீரென உடைந்து விட்டது. அதிர்ந்தேன். அவசர அவசரமாக கனத்த மனதுடன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்தோம்.

என்னை பரிசோதித்த மருந்துவர் குழந்தைகள் 7 மாதங்கள் என்பதால் சற்று பிழைப்பது கடினம் என்றனர். அங்கேயே நானும் உன் தந்தையும்  இடிந்து போனோம். கடவுள் பொக்கிஷங்களை கொடுத்து திரும்ப வாங்கி கொள்கிறாரே என கதறினோம். 

எப்படியாவது என் குழந்தைகளை காப்பாற்றுங்கள் என கெஞ்சினோம்.  சுற்றி இருந்தவர்கள் எங்களை இரக்கத்துடன் பார்த்தனர். பின் அவசர அறுவை சிகிச்சை மூலம் நீயும், உன் தம்பியும் பூமிக்கு உங்கள் பூ முகம் பதித்தீர்கள். அன்று மருத்துவனையே விழாகோலம் தான். உன் தந்தை, தாத்தா பாட்டி, பெரியம்மா என அனைவரும் கூடிவிட்டனர். மீண்டும் மயக்க நிலைக்கு நான் சென்றுவிட, மறுநாள் செய்தி என் காதில் இடியாய் விழுந்தது. ஆம். உன் தம்பி நம்மை விட்டு பிரிந்து விட்டான். 

எவ்வளவோ முயற்சித்தும் அவனை காப்பாற்ற முடியவில்லை. நீயாவது முழுமையாய் எனக்கு வேண்டும் என்ற நோக்கம். அவசரமாக தீவிர சிகிச்சை பிரிவிற்கு மடியில் உதிரத்துடன் உன்னை காண விரைந்தேன். என் உடல் வலிமையற்று இருந்தது.  குரல் கனத்தது. நான் கதறி அழும் சத்தம் சுற்றி இருந்தோரை விழிபிதுங்க செய்தது. ஆனால் உன்னை காண  அனுமதிக்கவில்லை. 

என் மார்பில் வழிந்தோடும் பால் சுரப்பிக்கு மட்டும்தான் தெரியும் என் வலி. அக்கம் பக்கத்தில் பிரசவ அறையில் பிரசவித்த பெண்கள்  பக்கத்தில் அவர்களது குழந்தைகள் இருந்தன. என் பக்கத்தில் நீ இல்லையே என ஏக்கத்தில் தவித்தேன். பசு பிரசவித்தால் முதலில் கன்று தன் தாய் முகத்தை தேடும். நான் பிரசவித்தும் அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என துடித்தேன்.

ஒரு மகனை கடவுள் பறித்துவிட்டான். ஒரு மகளையாவது எங்களுக்கு மீட்டு கொடு கடவுளே என மண்றாடினேன். 3 நாட்களுக்கு பின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து அழைப்பு வந்தது.  அது இன்ப செய்தி. உங்கள் மகள் நலமுடன் இருக்கிறாள், அவளைக் காண வாருங்கள் என்றனர். மனநிறைவுடன் உன்னைக் காண ஓடோடி வந்தேன். எடை குறைவாக பிறந்த உன்னைக் காணும் போது நெஞ்சில் முள்தைத்தது போன்ற உணர்வு. 

இருப்பினும் நானும் உன் தந்தையும் மனம் தளரவில்லை. என் முகத்தை பார்த்து நீங்கள் சிரித்ததை என்னால் இன்றும் மறக்கமுடியவில்லை. முதல் வேலையாக என் ரத்தத்தையே தாய்ப்பாலாக உணர்ச்சி மிகுந்து உங்களுக்கு தந்ததை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. தாய் தந்தை என அந்தஸ்து தந்த உன்னை பேணி காப்பதே எங்களின் இலட்சியமாக கருதினோம். இரவு பகலாக கண்விழித்து பார்த்து கொண்டோம். 45 நாட்கள் கழித்து உன்னை கையில் ஏந்தி வீடு திரும்பினோம்.

என் வாழ்க்கையில் விவரிக்க முடியாத மகிழ்ச்சியை நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள். உங்கள் வருகைக்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்..

உன்னை என் கைகளில் ஏந்தியிருக்கும் போது, எனக்குள் ஒருவித அதிசயமும், பிரம்மிப்பும் நிறைந்திருக்கிறது. நான் கண்ட வலிகளை விட நீ கண்ட சவால்களே மிக அதிகம். ஒவ்வொரு முறையும் நீ வலிமையுள்ளவளாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறாய். உன் மீது எனக்கு நிறைய நம்பிக்கையும், கனவுகளும் உள்ளன. என் முன்னோடியாக திகழும் நீ ஆர்வத்தை தழுவி கேள்விகளை கேட்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டாய் என நம்புகிறேன்.

வாழ்க்கை  என்ற  இந்த பயணத்தில் நீங்கள் ஒரு அன்பின் வட்டத்தால் சூழப்பட்டிருப்பதை நான் உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

உங்கள் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா மற்றும் உறவினர்கள் அனைவரும் உங்கள் வளர்ச்சியை காண உற்சாகமாக காத்திருக்கிறார்கள். உங்களை ஆதரித்து வழி நடத்துவார்கள்.

என் சொந்த வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட சில பாடங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். மற்றவர்களிடம் அன்பும், கருணையும் காட்டுங்கள். அனைவரிடமும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் கனிவுடன் பழகுங்கள்.

என் செல்ல குழந்தையே ! வழியில் பல சவால்களும்,  தடைகளும் இருக்கும். அதை எதிர்கொள்ள மனம் தளராமல் வலிமையானவளாக இருங்கள். வெற்றி மட்டுமே கிடைத்தால் தோல்விக்கு மதிப்பில்லை. தோல்விகளை வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக ஏற்றுக் கொள்ளுங்கள். கனவுகள் எவ்வளவு பெரியதாக தோன்றினாலும், அதை துரத்த ஒரு போதும் தயங்க வேண்டாம். வாழ்க்கை ஒரு அனுபவ பாடம் அதை ஒவ்வொரு நாளும் ஊக்கத்துடன் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் நானும், தந்தையும் இருக்கிறோம்.

உன்னை பெற்றெடுத்த நாளில் உன்னை எவரேனும் அழகு என்றால் நான் பெருமை கொள்ளவில்லை. நீ திறமையான பெண் என்றாலே நான் ஒரு தாயாக பெருமை கொள்வேன். அழகு நிரந்தரமற்றது. உன் திறமையே உன்னை வழி நடத்தும். அறிவு என்பது உன்னிடமிருந்து ஒரு போதும் பறிக்க முடியாத ஒரு பரிசு என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாள்தோறும் சிறந்த சிந்தனைகளையும், செயல்களையும் கொண்டு திறம்பட செயல்பட உன்னுடன் நானும் உன் தந்தையும் பயணிப்போம் என் அன்பு மகளே !.

என் சிறிய உடலின் அரவணைப்பை என் விரலால் உணர்ந்து நாம் ஒன்றாக செலவிடும் இந்த ஆரம்ப தருணங்களை நான் மிகவும் போற்றுவேன். நீயே என் மிக பெரிய வழிகாட்டி. ஒவ்வொரு நாளும் உன் வெற்றிப் பாதையை நாங்கள் உருவாக்குவோம். இது என் சத்திய வாக்கு !

நீங்கள் வளர்ந்த பின் இந்த கடிதத்தை படிக்கும் போது உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை கொண்டு வரும் என நம்புகிறேன். நீங்கள் அளவிட முடியாத அளவுக்கு நேசிக்கப்படுகிறீர்கள். உங்கள் மீதான எங்கள் காதல் ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதை அறிந்து  கொள்வீர்கள்.

எங்கள் வாழ்க்கையில் ஏராளமான சந்தோசத்தையும், அர்த்தத்தையும் பரிசாக அளித்த உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்போம். இன்னும் சிறிது நாட்களில் உங்கள் ஒரு வருட  பிறந்தநாளை நாங்கள்  ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம், என் தங்கமே!

  என்றும் காதலுடன் 

உன் தாய் !

இந்திரகுமாரி

Letter Contest

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.