England vs India: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 20ஆம் தேதி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
England vs India: 371 ரன்கள் இலக்கு
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 471 ரன்களை அடிக்க, பதிலுக்கு இங்கிலாந்து அணி 465 ரன்களை அடித்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால், கில், பண்ட் ஆகியோர் சதம் அடித்தனர், இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சதம் அடித்தார். பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
வெறும் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. நேற்று நான்காம் நாள் ஆட்டத்தின் கடைசி செஷன் முடிவதற்கு அரைமணி நேரத்தில் இந்திய அணி 365 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் சதம் அடித்து மிரட்டினர். இதையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று களமிறங்கியது.
England vs India: ருத்ரதாண்டவம் ஆடிய டக்கெட்
தொடர்ந்து, நேற்றே 21 ரன்களை அடித்த நிலையில், இன்று சுமார் 90 ஓவர்கள் மீதம் இருக்க 350 ரன்களை அடித்தால் வெற்றி என்ற நோக்கில் இங்கிலாந்து வந்தது. முதல் செஷனில் பும்ராவையும், சிராஜையும் பார்த்து பக்குவமாக ஆடியது டக்கெட் – கிராலி ஜோடி. பும்ரா அட்டாக்கில் இருந்து சென்று, பிரசித் மற்றும் ஜடேஜா வந்த உடன் டக்கெட் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார். குறிப்பாக, ஜடேஜாவுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களை அதிகமாக விளையாடி பவுண்டரிகளையும் ரன்களையும் விரைவாக குவித்தார். கிராலியும் அருமையாக ரன்களை சேர்த்தார். சிராஜ் அவருக்கு எதிராக ஓரிரு வாய்ப்புகளை உருவாக்கினாலும் விக்கெட் கிடைக்கவில்லை.
England vs India: கிராலி, போப் அடுத்தடுத்து அவுட்
இந்த ஜோடி மதிய உணவு இடைவேளை வரை ஆட்டமிழக்கவே இல்லை. அதன்பின்னரும் வந்து அதிரடியாக ரன்களை சேர்த்தது. இடையே மழை வந்து ஆட்டம் சிறிது நேரம் தடைப்பட்டு மீண்டும் தொடங்கியது. அப்போதுதான் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கிராலி 65 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்து பிரசித் வீசிய ஓவரில் போப் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
England vs India: கேட்சை கோட்டை விட்ட ஜெய்ஸ்வால்
தொடர்ந்து ரூட் உடன் சேர்ந்து டக்கெட் அதிரடியை தொடர்ந்தார். ரூட் நிதானம் காட்டினார். பும்ரா – சிராஜ் – பிரசித் – ஜடேஜா என முன்னணி பந்துவீச்சாளர்கள் போட்டும் விக்கெட் கிடைக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் டக்கெட் 149 ரன்களில் ஆட்டமிழந்தார். முன்னதாக, டக்கெட் 97 ரன்களில் இருந்தபோது ஸ்கொயர் லெக் திசையில் கொடுத்த கேட்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால் கோட்டைவிட்டார். அவர் கேட்சை விட்டதால் டக்கெட் 52 ரன்களை கூடுதலாக அடித்தார் டக்கெட். டக்கெட் ஆட்டமிழந்த அடுத்த பந்தே புரூக் டக்அவுட்டானார். இந்திய அணி ரசிகர்கள் குதூகலமானார்கள்.
England vs India: இங்கிலாந்து மிரட்டல் வெற்றி
ஆனாலும் அடுத்த பெரிதாக இங்கிலாந்து அணி சரியவில்லை. பென் ஸ்டோக்ஸ் 33 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அழுத்தம் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மீதுதான் இருந்தது. ரூட் உள்பட அனைவரும் பும்ராவை கச்சிதமாக விளையாடி அவரை அட்டாக்கில் இருந்து வெளியே எடுக்க வைத்தனர். தொடர்ந்து, ரூட் – ஜேமி ஸ்மித் சேர்ந்து ஆட்டத்தை முடித்துவைத்தனர். இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரூட் அரைசதம் கடந்தார். பும்ரா மற்றும் சிராஜிற்கு விக்கெட் கிடைக்கவே இல்லை. பிரசித் மற்றும் ஷர்துல் தாக்கூருக்கு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ஜடேஜா 1 விக்கெட்டை கைப்பற்றினர். டக்கெட் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
England சிறப்பான சாதனை, India மோசமான சாதனை
டெஸ்ட் வரலாற்றில், இங்கிலாந்து அணியின் 2வது அதிகபட்ச சேஸிங் இதுதான். இதற்கு முன்னரும், இந்தியாவுக்கு எதிராக 2022இல் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடந்த போட்டியில் 378 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்ததே சாதனையாக உள்ளது. அந்த போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ் கேப்டனாகவும், மெக்கலம் தலைமை பயிற்சியாளராகவும் இருந்தனர். மேலும் இந்திய அணி இந்த போட்டியில் 5 சதங்களை இந்திய அணி பதிவு செய்தும் தோல்வியடைந்துள்ளது. டெஸ்ட் வரலாற்றில் 5 டெஸ்ட் போட்டிகளை அடித்தும் தோல்வியடையும் முதல் அணியாக இந்திய அணி மோசமான சாதனையை படைத்திருக்கிறது.