இந்திய அணியின் 3 பெரிய தவறுகள்… படுதோல்விக்கு காரணங்கள் என்னென்ன?

India National Cricket Team: 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை (Anderson – Tendulkar Trophy 2025) தொடரில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் (England vs India) மோதி வருகின்றன. இந்திய அணிக்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், கடந்த 20ஆம் தேதி தொடங்கிய முதல் டெஸ்ட் நேற்று (ஜூன் 24) நிறைவடைந்தது.

Team England: செய் அல்லது செத்து மடி

இந்திய அணி (Team India) இமலாய இலக்காக 371 ரன்களை நிர்ணயித்தாலும், இங்கிலாந்தின் Bazball-இன் அணுகுமுறை அவர்களுக்கு மீண்டும் வெற்றியை தேடி தந்திருக்கிறது. தலைமை பயிற்சியாளராக மெக்கலம், கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பொறுப்பேற்றதில் இருந்து இங்கிலாந்து அணி இந்த அதிரடி பாணி ஆட்டத்தையே தொடர்ந்து வருகிறது. டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணி 2வது அதிகபட்ச வெற்றிகரமான சேஸிங் இதுதான். இதில் முதல் வெற்றிகரமான சேஸிங்கும் 2022இல் இந்தியாவுக்கு எதிராகவே வந்தது. அப்போது ஸ்டோக்ஸ் – மெக்கலம் தலைமையில்தான் இங்கிலாந்து விளையாடியது. 

இவர்கள் பொறுப்பேற்று இங்கிலாந்து (Team England) விளையாடி உள்ள 36 போட்டிகளில் 23 போட்டிகளை வென்றிருக்கிறது. 12 போட்டிகளில் தோற்றிருக்கிறது. ஆனால் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே டிரா செய்தது. 2023 ஆஷஸ் தொடரில் மான்சென்டர் டெஸ்ட் போட்டி மழையால் கடுமையாக  பாதிக்கப்பட்டதாலேயே டிரா ஆனது. Bazball பாணியில் டிரா என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. செய் அல்லது செத்து மடி என்றே பாணிதான் அவர்களுடையது.

Team India: இந்திய அணி செய்த பெரிய 3 தவறுகள்

இங்கிலாந்து இப்படி வலுவாக இருந்தாலும் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471, இரண்டாவது இன்னிங்ஸில் 365 என ஒட்டுமொத்தமாக 836 ரன்களை குவித்தது. ஆனாலும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருக்கிறது. ஒரே போட்டியில் 5 சதங்களை அடித்த அணி தோல்வியடைவது இதுதான் டெஸ்ட் வரலாற்றிலேயே முதல்முறை. இப்படி மோசமான தோல்வியை அடைய இந்திய அணி செய்த 4 பெரிய தவறுகளை இங்கு காணலாம்.

Team India: டெயிலெண்டர்களின் சொதப்பல் பேட்டிங்

இந்திய அணிக்கு இந்த முறை டாப் ஆர்டர் சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. ஆனால், பின்வரிசை பேட்டர்கள் மிக சொதப்பலாக விளையாடினர். ஜெய்ஸ்வால் – ராகுல் – சாய் – கில் – பண்ட் இவர்கள் 5 பேரை தவிர்த்து மீதம் உள்ள 6 பேர் முதல் இன்னிங்ஸில் 16 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 49 ரன்களையுமே அடித்தனர். முதல் இன்னிங்ஸில் 430 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என இருந்த நிலையில், 471 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்டானது. அதாவது, 41 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இந்தியா அந்த இடத்தில் இழந்து தடுமாறியது. நிச்சயம் இந்திய அணி 550 ரன்கள் வரை சென்றிருக்க வேண்டும். 

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் 333 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என இருந்த நிலையில், 365 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதில் 32 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. இந்திய அணியின் தோல்விக்கு இதுவும் முக்கிய காரணம். இங்கிலாந்து பின்வரிசை பேட்டர்கள் மட்டும் 132 ரன்களை அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் இன்னும் சில மணிநேரம் விளையாடியிருக்க வேண்டும். 

நிச்சயம் ஐந்தாம் நாளின் முதல் செஷனில் 15 ஓவர்களாவது விளையாடியிருக்க வேண்டும். எப்படியும் இங்கிலாந்து பேட்டர்கள் டிராவுக்கு விளையாடப்போவது கிடையாது. ஓவர்கள் குறைவாக இருக்க அதிக ரன்கள் இருக்கும்பட்சத்தில் இங்கிலாந்துக்கு கூடுதல் நெருக்கடியை கொடுத்திருக்கலாம். சூழலும் நேற்று ஆரம்பத்தில் இந்தியாவுக்கு சாதகமாக இல்லை. டெயிலெண்டர்களாவது இதை செய்திருக்க வேண்டும். 

Team India: பந்துவீச்சு பலவீனம்

பும்ரா விக்கெட் எடுத்தால் இந்தியா வெற்றிபெறும், பும்ரா விக்கெட் எடுக்காவிட்டால் தோல்வியடையும் என்பது நேற்று மீண்டும் நிரூபணம் ஆனது. சிராஜ் நேற்று 2வது இன்னிங்ஸில் சிறப்பாகவே பந்துவீசினார். அவருக்கு ஆனால் துரதிருஷ்டவசமாக விக்கெட் விழவில்லை. 2வது இன்னிங்ஸை ஒப்பிடும்போது, முதல் இன்னிங்ஸில்தான் இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் சொதப்பலாக இருந்தது. நேற்று பிரசித், ஷர்துல் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தாலும் இங்கிலாந்து சௌகரியமான இடத்தில் இருந்ததற்கும் அவர்கள்தான் காரணம். 

விக்கெட்டுகளை எடுத்தாலும் அதிக பவுண்டரிகளை கொடுத்தது, லைன் மற்றும் லெந்தில் தொடர்ச்சியாக சொதப்பியது ஆகியவற்றை குறிப்பிட்டே ஆக வேண்டும். எனவே அடுத்த போட்டியில் ஆடுகளம் இதேபோன்று புற்கள் இன்றி பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தால் ஷர்துலுக்கு பதில் குல்தீப் யாதவை 8வது இடத்தில் எடுக்க வேண்டும். இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கும் வாய்ப்பு கொடுக்கலாம். சாய் சுதர்சன் அல்லது கருண் நாயரில் ஒருவரை வெளியே வைத்துவிட்டு நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பளிக்கலாம். இதனால் 2 சுழற்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும், 4 வேகப்பந்துவீச்சு ஆப்ஷனும் கிடைக்கும், நீண்ட பேட்டிங் வரிசையும் கிடைக்கும். 

Team India: கோட்டை விட்ட கேட்ச்கள்

முதல் இன்னிங்ஸிலும் சரி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சரி எக்கச்சக்க கேட்ச்களை தவறுவிட்டதால்தான் இந்திய அணி தோல்வியை தழுவியது என உறுதியாக கூறலாம். முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், ஜடேஜா, பண்ட் ஆகியோர் கேட்ச்சை தவறவிட்டாலும் அவர்கள், கேட்ச்சில் இருந்து தப்பித்த பேட்டர்கள் பெரியளவில் சேதம் விளைவிக்காததால் முதல் இன்னிங்ஸில் அது பெரிய தாக்கமாக தெரியவில்லை. ஜெய்ஸ்வால் எளிமையாக வந்த 2 கேட்ச்களை விட்டது கடுமையாக விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. 

தொடர்ந்து, நேற்று இங்கிலாந்தின் ஓபனிங் ஜோடி ஒரு சின்ன தவறை கூட செய்யாமல் நீண்ட நேரம் களத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்படியிருக்க, பென் டக்கெட் 97 ரன்களில் இருக்கும்போது ஸ்கொயர் லெக் திசையில் ஒரு கேட்சை கொடுத்தார். அந்த பந்து அப்போதும் ஜெய்ஸ்வால் பக்கமே போனது, அவரும் அந்த கேட்சை தவறுவிட்டார். இங்கிலாந்து அணி இங்குதான் தனது வெற்றியை உறுதிசெய்தது. அதன்பின் டக்கெட் 52 ரன்களை அடித்தது மட்டுமின்றி இங்கிலாந்துக்கு தேவையான ரன்ரேட்டை குறைத்துவிட்டு சென்றுவிட்டார். இதனால்தான் மிடில் ஆர்டர் பேட்டர்கள் அழுத்தமின்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தார்கள். ஜெய்ஸ்வால் நிச்சயம் கேட்சை மட்டும் விடவில்லை, மேட்சை கோட்டை விட்டிருக்கிறார். முதல் இன்னிங்ஸில் அடித்த சதமும் வீணாகியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.