6 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர மறுஆய்வு: தேர்தல் கமிஷன் திட்டம்

புதுடெல்லி,

பீகார் மாநில சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடைகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது.

எனவே, மேற்கண்ட 6 மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலை தீவிர மறுஆய்வுக்கு உட்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. பா.ஜனதாவுக்கு உதவுவதற்காக, வாக்காளர் பட்டியலில் தேர்தல் கமிஷன் தில்லுமுல்லு செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

வங்காளதேசம், மியான்மர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் கமிஷன் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. அவர்களது பிறந்த இடம் மற்றும் பிறந்த தேதியை சரிபார்க்க முடிவு செய்துள்ளது. வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கவும், வெளிமாநிலங்களில் இருந்து பெயர்களை மாற்றவும் விண்ணப்பம் கொடுப்பவர்களிடம், அவர்களது பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கான ஆவணங்களை கேட்க திட்டமிட்டுள்ளது.

அவர்கள் 1987-ம் ஆண்டு ஜூலை 1-ந்தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்ததாக உறுதிமொழி அளிக்க வேண்டி இருக்கும். பீகாரில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு உடனடியாக தீவிர மறுஆய்வு பணி தொடங்குகிறது. மற்ற 5 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீவிர மறுஆய்வு பணி தொடங்கும்.

வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள், வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்த்து, பிழை இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கு வழிவகுப்பார்கள் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இறந்தவர்கள் பெயர்களும் நீக்கப்படும். இப்பணி, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.